பெங்களூரில் இனி 24 மணி நேரமும் காவேரி கொட்டும்! புதிய திட்டத்தை அறிவித்தார் முதல்வர் சித்தராமையா
பெங்களூர்: இன்று கர்நாடகாவில் பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த நிலையில், அதில் பெங்களூரில் 24 மணி நேரமும் காவிரி நீரை வழங்க புது திட்டத்தை அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
மத்திய இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப். 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். இடைக்கால பட்ஜெட் என்பதால் இதில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.

அதைத் தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகின்றனர், தமிழ்நாட்டில் அடுத்த வாரம் பட்ஜெட் தாக்கலாக உள்ளது. நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
முக்கிய அறிவிப்பு: கர்நாடக முதல்வரும் நிதித்துறையைக் கைவசம் வைத்திருக்கும் சித்தராமையா மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. இதற்கிடையே பெங்களூரில் குடிநீர் வழங்கல் தொடர்பாகவும் அவர் முக்கிய அறிவிப்புகளைத் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூர் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) காவிரி நீர் விநியோகத்தை நகரின் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் முடிந்தால் பெங்களூர் மக்களுக்கு 24 மணி நேரமும் காவிரி நீர் விநியோகம் இருக்கும்.
காவிரி நீர் கொட்டும்: காவிரி ஃபேஸ்-5 திட்டத்தின் கீழ் தினசரி 775 மில்லியன் லிட்டர் நீர் கிடைக்கும் என்றும் இதன் மூலம் பெங்களூர்வாசிகளுக்கு காவரி நீரை சப்ளை செய்ய உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் பெங்களூரில் வசிக்கும் 12 லட்சம் பேருக்குத் தினசரி தலா 110 லிட்டர் குடிநீர் வழங்கப்படும்.. ரூ. 5,550 கோடி மதிப்பிலான இத்திட்டம் வரும் மே மாதம் நிறைவடையும் என்றும் பட்ஜெட் உரையில் கூறப்பட்டு இருக்கிறது.
மேலும், இந்த பேஸ் 5 திட்டத்தின் கீழ் வடிகால் பணிகளும் தனியாக நடந்து வருகிறது. இந்தக் கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது., இத்திட்டத்தின் கீழ் 228 கி.மீ.க்கு வடிகால் குழாய்கள் அமைக்கப்படும். மேலும் 13 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே உள்ள ஏழு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் 441 கோடி செலவில் புதுப்பிக்கப்படும். இதன் மூலம் சுமார் தினசரி 268 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கப்படும்.
கர்நாடக பட்ஜெட்: கர்நாடகா முதல்வர் சித்தராமையா தனது பட்ஜெட் உரையில் வேறு பல முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். மத்திய பாஜக அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பால் கர்நாடகாவுக்கு ரூ59,274 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த சித்தராமையா நாட்டிலேயே ஜிஎஸ்டி வரி வசூலில் கர்நாடகா 2ஆவது மாநிலமாக இருக்கும் போதிலும் ஆனால் மத்திய பாஜக அரசோ உரியப் பங்கைத் தரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காவிரியின் குறுக்கே மத்திய அரசின் உரிய அனுமதி பெற்று மேகதாது அணையைக் கட்டுவோம் என்ற அவர், சஞ்சீவினி கஃபே என்ற பெயரில் பெண்களே நடத்தும் கஃபேக்கள் ரூ7.50 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் விஸ்வேஸ்வரய்யா பொறியியல் கல்லூரி, ஐஐடி தரத்துக்கு ரூ500 கோடியில் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தவிர மேலும் பல அறிவிப்புகளும் அவரது பட்ஜெட் உரையில் இடம்பெற்றிருந்தது.












Click it and Unblock the Notifications