"நான் செத்து கொண்டிருக்கிறேன்.." 3 ஆண்டுகளாக லீவ் கூட இல்லை! புலம்பும் பெங்களூர் ஐடி ஊழியர்
பெங்களூர்: கர்நாடகாவில் பெங்களூரில் தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஊழியர் புலம்பித் தள்ளி இருக்கிறார். கடந்த 2.5 ஆண்டுகளாக லீவ் கூட இல்லாமல் வேலை செய்வதால் தனது உடல் மட்டும் மனநலன் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தான் செத்துக் கொண்டு இருக்கிறேனா என்ற கேள்வியைக் கூட இது எழுப்புவதாகவும் அவர் புலம்பி இருக்கிறார்.
கர்நாடகாவில் பெங்களூரில் வேலை செய்து வரும் கார்ப்பரேட் ஊழியர், ஆபீஸ் வேலை தன்னை எந்தளவுக்குப் பாதித்துள்ளது என்பதை ரெட்டிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகள் மிகக் கடுமையாக வேலை செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதனால் கேரியரில் வளர்ச்சி இருந்தாலும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மிக மோசமான வேலைச் சூழல்
தொடக்கம் முதலே தனது வாழ்க்கையில் வேலை ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் ஒரு டாக்சிக் ஒர்க் சூழல் உள்ள அலுவலகத்தில் தொடக்கம் முதலே போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் 14 முதல் 16 மணி நேரம் வேலை செய்ய வேண்டி இருப்பதாகவும் பல நாட்கள் அதிகாலை 2 மணி வரை விழித்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இரவு 2 மணிக்குத் தூங்கினாலும் காலை 9 மணிக்குள் ஆபீசுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்த நிறுவனத்தில் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் வேலைக்குச் சேர்ந்ததாகவும் இங்குள்ள கடுமையான அழுத்தம் காரணமாக மூன்று வருடங்களுக்குள் 24 கிலோ எடை ஏறிவிட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார். முறையற்ற தூக்கம், நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டி இருப்பது, சேரில் இருந்து எழக்கூட முடியாத அளவுக்கு உள்ள அதீத வேலையே இதற்குக் காரணம் என்கிறார்கள்.
புலம்பல்
இது தொடர்பாக அவர் மேலும் தனது ரெட்டிட் பக்கத்தில், "உங்களில் பெரும்பாலோரைப் போலவே, நானும் இந்தியாவில் ஒரு கார்ப்பரேட் அடிமை தான். நான் முறையாகத் தூங்கிய பல நாட்கள் ஆகிவிட்டது. சில நாள் 11 மணி, சில நாள் இரவு 2 மணி எனத் தூக்கம் சீராக இருக்காது. இருந்தாலும் நான் எப்போதும் 9 மணிக்குள் அலுவலகத்தில் இருப்பேன்.
பெற்றோரைக் கூட பார்க்க முடியவில்லை
எனது வேலை இப்படி இருப்பதைப் பார்த்து எனது அம்மா ரொம்ப கவலைப்படுகிறார். இந்த வேலை காரணமாக எனது தனிப்பட்ட வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2. ஆண்டுகளில் என்னால் எங்கும் செல்ல முடியவில்லை. எனது தாய்- தந்தை பெங்களூர் அருகில் உள்ள நந்தி ஹில்ஸில் தான் வசித்து வருகிறார்கள். ஆனால், அங்குக் கூட என்னால் செல்ல முடியவில்லை. இந்தக் கடினமான சூழலில் எனது கேர்ள் பிரண்ட் மட்டுமே பாசிட்டிவாக இருக்கிறார். ஆனால், அவருடன் போதிய டைம் செலவிட முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சியும் எனக்கு இருக்கிறது.
செத்துக் கொண்டிருக்கிறேன்
நான் கடினமாக உழைத்து வருகிறேன். எனக்கு மிகவும் சோர்வாக இருக்கிறது. பெரும்பாலான வீக் எண்ட்களிலும் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. விடுமுறையை ரத்து செய்ய வேண்டி இருக்கிறது. ஒரு நல்ல ஊழியராக எல்லாம் செய்துள்ளேன். எனக்குச் சம்பளம் வருகிறது ஓகே. ஆனால், எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியோ அமைதியோ இல்லை. ஓய்வு எடுக் கூட முடியவில்லை. மனரீதியாகச் சோர்வாக இருக்கிறது. நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? நான் உண்மையில் செத்துக் கொண்டிருக்கிறேனா?" எனப் புலம்பித் தள்ளி இருக்கிறார்
அவரது இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள். அந்த வேலையை விட்டுவிட்டு, கொஞ்ச நாள் பிரேக் எடுங்கள்.. வெளியே ஒரு டிரிப் போய் வந்துவிட்டு வேறு வேலையில் சேர முயலுங்கள் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications