கர்நாடகாவில் இன்று முதல் பார்கள், பப்புகள், கிளப்புகள் திறப்பு.. குடிமகன்கள் உற்சாகம்
பெங்களூரு: கர்நாடக அரசு இன்று முதல் மாநிலத்தில் உள்ள பார்கள், விடுதிகள், கிளப்புகள் மற்றும் ரெஸ்டாரெண்டுகளில் மதுபானம் வழங்க அனுமதித்துள்ளது. 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே ஆட்களை அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் பொதுமுடக்ககம் அமலுக்கு வந்த மார்ச் மாதத்திலிருந்து மதுபானம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் இருந்தன. இப்போது வரை இந்த மதுபான நிறுவனங்களில் இருந்து மதுபானங்களை வாங்கி செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் செப்டம்பர் 1ம் தேதியான இன்று முதல் கர்நாடகாவில் உள்ள பார்கள், விடுதிகள், கிளப்புகள் மற்றும் ரெஸ்டாரெண்டுகளில் 50 சதவீத இருக்கைகளுடன் மதுபானம் வழங்க அனுமதித்துள்ளது.
கர்நாடகா அரசு
கோவிட் -19 க்கான உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ) வழிகாட்டுதல்கள் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) கண்டிப்பாக பின்பற்றுமாறு மதுபான விற்பனை நிறுவனங்களுக்கு கர்நாடகா அரசு அறிவுறுத்தியுள்ளது.
நிதிவருவாய்
அஸ்ஸாம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற தளர்வுகள் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாக கர்நாடகா மாநில கலால் ஆணையரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நிதி வருவாயை அதிகரிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
என்ன அனுமதி
கர்நாடகாவில் மே மாதத்தில் இருந்தே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இன்று முதல் பார்களும், விடுதிகள், கிளப்புகள் மற்றும் ரெஸ்டாரெண்டுகளும் திறக்கப்பட்டுள்ளதால் மதுபானங்களை அங்கு அமர்ந்து சாப்பிட அம்மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளது.
பப்கள், ரெஸ்டாரெண்ட்
கர்நாடகா அரசின் முடிவுக்க அம்மாநிலத்தில் உள்ள பார் உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதேபோல் ஹோட்டல்கள், பப்கள், ரெஸ்டாரெண்ட் உரிமையாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தொற்று நோய் பரவல் காரணமாக மக்கள் அச்சத்தில் உள்ளதால் வணிகம் வழக்கமான நிலையை எட்ட சில காலம் ஆகும், எனவே அதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.