பெங்களூரில் காதலி ஏமாற்றியதால், காதலன் தவறான முடிவு.. 2 கே கிட்ஸ் அறிய வேண்டிய பாடம்
பெங்களூர்: பெங்களூருவில் காதலி ஏமாற்றியதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, பி.காம் பட்டதாரி இளைஞர் வாழ்க்கையை முடித்துக் கொண்ட துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூரு எலகங்கா நியூ டவுன் பகுதியில் உள்ள அட்டூர் லேஅவுட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர் அபிஷேக் காதலி ஏமாற்றியதாக கூறி தவறான முடிவெடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது.
காதலில் ஏமாற்றம் என்பது தனிப்பட்ட நபரைப் பொறுத்து மாறுபடும் ஒரு கசப்பான அனுபவம். ஒரு பெண் அல்லது ஒரு காதலி உறவை முறித்துக்கொள்வதற்கோ அல்லது விலகிச் செல்வதற்கோ பல காரணங்கள் இருக்கலாம். அவை எப்போதும் "துரோகம்" என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே இருக்காது, சில நேரங்களில் சூழ்நிலை சார்ந்தவையாகவும் இருக்கலாம்.

பொதுவாக பலர் பள்ளி அல்லது கல்லூரி காலங்களில் காதலில் விழுகிறார்கள். முதலில் வரும் காதல் இனக்கவர்ச்சி அடிப்படையில் தான் வரும். ஆனால் வயது கூடும்போது சிந்தனைகளும் தேவைகளும் மாறுகின்றன. 18 வயதில் பிடித்த ஒரு விஷயம் 24 வயதில் பிடிக்காமல் போகிறது.. வாழ்க்கையைப் பற்றிய லட்சியங்கள் மாறும்போது, துணையை மாற்ற விரும்புகிறார்கள். அதனால் திருமணத்திற்கு முன்பே துணையை விட்டு பிரிந்து செல்கிறார்கள்.
அதேபோல் சமூகத்தில் இன்றும் காதல் திருமணங்களுக்குப் பெற்றோரின் சம்மதம் என்பது மிகப்பெரிய சவால் உள்ளது. பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பது நடக்கிறது. பல நேரங்களில், குடும்பத்தின் அமைதிக்காகவும், பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் பெண்கள் தங்கள் காதலைத் தியாகம் செய்வதும் நடக்கிறது. இது ஆண்களுக்கு ஏமாற்றமாகத் தெரிந்தாலும், பெண்களுக்கு அது ஒரு தர்மசங்கடமான சூழலும் ஏற்படுகிறது.
ஒரு பெண் தனது எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கும்போது, தன் துணை பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் நிலையான இடத்தில் இருக்கிறாரா என்று பார்ப்பார். தொடர்ச்சியான சண்டைகள், புரிதல் இல்லாமை அல்லது எதிர்காலத்தைப் பற்றிய தெளிவின்மை இருக்கும் ஆணை நேசித்த பின் அந்த உறவை கைவிடுகிறார். அதேபோல் உறவில் அதிகப்படியான ஆதிக்கம் செலுத்துவது, சந்தேகப்படுவது அல்லது காதலிக்கச் சொல்லி வற்புறுத்துவது போன்ற செயல்கள் அவர்களிடையே நெருக்கத்தை குறைத்து பயத்தை உண்டாக்கிவிடுகிறது. இப்படியான சூழல்களில் ஏதாவது ஒன்றின் காரணமாகவே காதலி காதலனை விட்டு பிரிந்து செல்கிறார். பெங்களூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
பெங்களூரு எலகங்கா நியூ டவுன் பகுதியில் உள்ள அட்டூர் லேஅவுட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர் அபிஷேக். பி.காம் பட்டதாரி ஆவார். கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி தனது வீட்டில் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார். பி.காம் பட்டதாரியான அபிஷேக் கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். சமீபகாலமாக அந்தப் பெண் காதலை முறித்துக் கொண்டதால் அபிஷேக் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்கு முன்னதாக, தனது காதலிக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியதுடன், வீடியோ காலில் தான் சாகப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் எழுதியுள்ள அந்தத் கடிதத்தில், "நான் அவளைப் பைத்தியமாக நேசித்தேன், ஆனால் அவள் என்னை ஏமாற்றிவிட்டாள்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது அண்ணன் மற்றும் நண்பர்களிடம், அவர்களுக்காக நேரம் ஒதுக்க முடியாமல் போனதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.
எலகங்கா நியூ டவுன் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. பெண்ணின் பெற்றோருக்கு விஷயம் தெரிந்தவுடன் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்தப் பெண் கடந்த சில மாதங்களாகப் பேசுவதைத் தவிர்த்திருக்கிறார்.
இருப்பினும் அபிஷேக் தொடர்ந்து வற்புறுத்தியதால், பெண்ணின் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அங்கு இருதரப்பையும் அழைத்து எச்சரித்து சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அபிஷேக்கின் குடும்பத்தினர் அளித்த வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.












Click it and Unblock the Notifications