"+2 மார்க் கம்மியா இருக்கு.. வீடு வாடகைக்கு தர முடியாது!" பெங்களூர் ஓனரின் பதில்! தலையே சுத்திடுச்சு
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் வாடகைக்கு வீட்டைப் பிடிப்பது ரொம்பவே கடினம். இதனிடையே அங்கே ஒருவர் தனது உறவினர் வீடு தேடிய போது நடந்த அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
பொதுவாக இணையத்தில் நீங்கள் ஒரு வித போஸ்ட்களை அடிக்கடி பார்க்கலாம். அதாவது வெறும் 3 மணி நேர பரீட்சை அல்லது ஒரு தேர்வு எனது வாழ்க்கையை முடிவு செய்யாது என்று பலரும் போஸ்ட் செய்து வருவார்கள்.

ஆனால், இங்கே ஒருவருக்கு உண்மையில் அவரது தேர்வு முடிவு தான் அவருக்கு எதிராக அமைந்துள்ளது. அதுவும் பல ஆண்டுகள் கழித்துத் தேர்வில் அவர் பெற்ற மார்கே அவருக்குச் சிக்கலைக் கொடுத்துள்ளது.
வாடகைக்கு வீடு: இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகச் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்கள் இருக்கிறது.. பலரும் மெட்ரோ நகரங்களுக்கு வருவதால் இதுபோன்ற நகரங்களில் தேவை அதிகமாக இருப்பதால் வாடகைக்கு வீடு கிடைப்பதே குதிரை கொம்பாக உள்ளது. அதிலும் இந்தியாவின் ஐடி ஹப்பாகவும் ஸ்டார்ட்அப் மையமாக இருக்கும் பெங்களூரில் வீடு வாடகைக்குப் பிடிப்பதே பெரும் துயரமாக இருக்கிறது.
பெங்களூரில் வீடு வாடகைக்குத் தேடிச் சென்றிருந்தால் தெரிந்திருக்கும் அங்கே இருக்கும் அதீத வாடகையைக் காட்டிலும் ஓனர்களின் நியாயமற்ற கண்டிஷன்கள் தான் கடுப்பேற்றுவதாக இருக்கும். இதன் காரணமாகவே இணையத்தில் பலரும் பெங்களூரில் வாடகைக்கு வீட்டைக் கண்டுபிடிப்பதை விட ஐஐடியில் சேர்வது ஈஸியானது என்று கூறுகிறார்கள். அப்படி வினோதமான காரணத்திற்கு ஒருவருக்கு வீடு கிடைக்காமல் போன சுவாரசிய சம்பவம் இப்போது நடந்துள்ளது.

+2 மார்க்: அதாவது வீடு வாடகை கேட்ட நபர் 12ஆம் வகுப்பில் உரிய மார்க் பெறவில்லை என்று கூறி உரிமையாளரால் வீட்டை மறுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது நம்ப முடியாத ஒன்றாகத் தோன்றினாலும் கூட இதுதான் உண்மை. இதற்கு ஆதாரமாக அந்த நபர் தனது உறவினர் தரகருடன் நடத்திய வாட்ஸ்அப் உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் பயனர் ஷுப் என்பவர் தனது உறவினர் வீடு பார்க்கும் போது நடந்த சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அவரது உறவினர் வீடு பார்த்த போது, அந்த தரகர் ஆதார் மற்றும் பான் கார்டுகள் மட்டுமின்றி, லிங்க்ட்இன், ட்விட்டர் கணக்கு, பணிபுரியும் நிறுவனத்தில் சேருவதற்கான கடிதம் மற்றும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மார்க் ஷீட்களையும் கேட்டுள்ளார்.
மறுத்த உரிமையாளர்: இது மட்டுமின்றி ஏதோ பரீட்சைக்கு கேட்பதைப் போலத் தன்னைப் பற்றி 200 வார்த்தைகள் கொண்ட கட்டுரையையும் கேட்டுள்ளார். பின்னர் கொஞ்ச நாட்கள் கழித்து மீண்டும் தொடர்பு கொண்ட தரகர் வீட்டை தர உரிமையாளர் மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளார். அதிலும் அதற்கு வர் சொன்ன காரணம் தான் பயங்கர வினோதமாக இருந்துள்ளது. அதாவது +2இல் போதிய மார்க் பெறவில்லை என்று கூறி வீட்டை தர மறுத்துள்ளார்.
அதற்காக இவர் ஏதோ கம்மி மார்க் எடுத்துள்ளார் என நினைக்காதீர்கள். இவர் +2இல் 75% மார்க் எடுத்துள்ளார். இருப்பினும், அது ஓனருக்கு போதாதாம். +2இல் 90% மார்க் எடுத்தால் மட்டும் வீட்டை வாடகைக்குத் தருவாராம். இந்த ஸ்க்ரீன் ஷாட்களை பகிர்ந்த அந்த நபர், "உங்கள் எதிர்காலத்தை மார்க் தீர்மானிக்காது.. ஆனால் பெங்களூரில் உங்களுக்கு ஒரு பிளாட் கிடைக்குமா இல்லையா என்பதை மார்க் நிச்சயமாகத் தீர்மானிக்கிறது" என்று வேடிக்கையாகப் பதிவிட்டுள்ளார்.
இது ஓவர் தான்: வீட்டை வாடகைக்குத் தர மறுத்த அந்த உரிமையாளர் ஐஐஎம்-இல் பேரசிரியாக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவர். இதற்கு இணையத்தில் பலரும் பல வித கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். பெண் கொடுக்க கேட்பதைப் போல இத்தனை விவரங்களைக் கேட்பது எல்லாம் ஓவர் தான் எனப் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இது குறித்து நெட்டிசன் ஒருவர், "இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும் பெங்களூரில் உண்மையில் இதுதான் நடக்கிறது. இதைத் தடுக்க எதாவது செய்ய வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், "பெங்களூரில் வாடகைக்கு வீட்டை எடுக்கும் போது, நீங்கள் ஐடி நிறுவனத்தில் பணிபுரிவதாகச் சொன்னால் வாடகை ஜெட் வேகத்தில் உயர்ந்துவிடும். அதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இன்னும் சிலரோ நிச்சயம் விரைவில் பெங்களூரில் வீடு வாடகைக்கே தனியாக எக்ஸாம் வந்துவிடும் என்றும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications