ஆஞ்சநேயர் கோயிலை புதுப்பிக்க ரூ 1 கோடி நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லீம் சகோதரர்!.. இதுதான் இந்தியா!
பெங்களூரு: பெங்களூரு அருகே ஆஞ்சநேயர் கோயிலுக்கு ரூ 1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக முஸ்லீம் முதியவர் வழங்கியுள்ளார். அவருக்கு ஏராளமானோர் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
பெங்களூரு காடுகோடி பெலதூர் காலனியில் வசித்து வருபவர் எச்.எம். ஜி. பாஷா (65). இவர் வாடகை லாரி தொழிலதிபர் ஆவார்.
இவருக்கு பெங்களூருவில் இருந்து 35 கி.மீ தூரத்தில் உள்ள ஓசகோட்டே வலகேரபுராவில் பழைய மெட்ராஸ் சாலையில் 3 ஏக்கர் நிலம் உள்ளது.

கோயில் நிர்வாகம்
இந்த நிலத்தையொட்டி ஒரு வீர ஆஞ்சநேயர் கோயிலும் உள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பாதை இல்லாததால் பக்தர்கள் சிரமப்பட்டு சென்று வந்தனர். இந்த கோயிலை புனரமைக்க பக்தர்களும் கோயில் நிர்வாகத்தினரும் முடிவு செய்திருந்தனர்.

பக்தர்கள்
இதற்காக பாஷாவிடம் சில பக்தர்கள் நிலம் வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்ற பாஷா, ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகில் உள்ள 1 ஏக்கர் 5 சென்ட் நிலத்தை கோயிலுக்கு தானமாக வழங்க முடிவு செய்தார். அதன்படி அவர் ரூ 1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக எழுதி கொடுத்தார்.

மனிதர்கள்
மதத்தை கடந்து ஆஞ்சநேயர் கோயிலுக்கு பாஷா நிலம் வழங்கியதை அடுத்து அவரை பலர் பாராட்டி வருகிறார்கள். இதுகுறித்து பாஷா கூறுகையில் இந்து, முஸ்லிம் என்ற பாகுபாட்டை யாரும் பார்க்கக் கூடாது. நாம் அனைவரும் மனிதர்கள். அவ்வளவே.

சொந்த நலன்
சில அரசியல்வாதிகள் சொந்த நலனுக்காக மக்களிடையே ஜாதி, இனம், மொழி அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர். தற்போதைய தலைமுறை வகுப்புவாத நடவடிக்கைகளை சிந்தித்து வருகிறது. இது முற்றிலும் மாற வேண்டும். சிலர் லவ்- ஜிகாத் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

நாடு முன்னேறுமா
இது போன்ற செயல்களால் நாடு முன்னேறுமா, நாம் ஒற்றுமையாக இருக்கவே எனது நிலத்தை ஆஞ்சநேயர் கோயிலுக்கு தானமாக வழங்கிவிட்டேன். புதுப்பிக்கப்படவுள்ள ஆஞ்சநேயர் கோயிலை பார்க்க ஆவலாக உள்ளேன். இன்று இருப்போர் நாளை இல்லை. வாழ்வில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதில் உறுதியாக உள்ளேன் என்றார் பாஷா.












Click it and Unblock the Notifications