பெங்களூர் மக்களுக்கு குட் நியூஸ்.. மெட்ரோ ரயில் நேரம் திடீர் மாற்றம்.. ஐடி ஊழியர்கள் ஹேப்பி
பெங்களூர்: ஐடி ஊழியர்களை மனதில் வைத்து பெங்களூரில் ஆர்வி ரோடு முதல் பொம்மச்திரா வரை மஞ்சள் வழித்தடத்தில் புதிதாக கடந்த மாதம் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஒவ்வொரு 25 நிமிடத்துக்கும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் 19 நிமிடத்துக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் பயணிக்க உள்ளது. அதுமட்டுமின்றி மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மெட்ரோ ரயில் சேவையை வழங்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது பெங்களூர் ஆர்வி ரோட்டில் இருந்து பொம்மசந்திரா வரை மொத்தம் 19.1 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவையை கடந்த மாதம் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த மெட்ரோ ரயில் ஆர்வி ரோடு, ராகி குட்டா இன்டர்சேஞ்ச், ஜெயதேவா ஹாஸ்பிட்டல், பிடிஎம் லேஅவுட் இன்டர்சேஞ்ச், சென்ட்ரல் சில்க் போர்டு, பொம்மனஹள்ளி இன்டர்சேஞ்ச், ஹொங்கசந்திரா, கூட்லு கேட், சிங்கசந்திரா, ஹொசரோடு, பீரதின அக்ரஹாரா, எலக்ட்ரானிக் சிட்டி, இன்போசிஸ் பவுணடேஷன் (கோனப்பன அக்ரஹாரா), ஹூஸ்கூர் ரோடு, பயோகான் ஹெப்பகோடி, டெல்டா எலக்ட்ரானிக்ஸ் பொம்மசந்திரா என 16 ஸ்டேஷன்களை கொண்டு உள்ளது.
இந்த வழித்தடத்தில் மொத்தம் 3 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு 25 நிமிடத்துக்கும் ஒருமுறை மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. இநு்நிலையில் தான் இன்று முதல் புதிதாக ஒரு மெட்ரோ ரயில் இந்த வழித்தடத்தில் சேவையை தொடங்க உள்ளது. இதனால் இன்று முதல் ஒவ்வொரு 25 நிமிடத்துக்கு பதில் ஒவ்வொரு 19 நிமிடத்துக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயங்க தொடங்கி உள்ளது. இது பயணிகள் மெட்ரோ ரயிலுக்காக காத்திருக்கும் நேரத்தை மிச்சப்படுத்தும்.
மேலும் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வாரத்தில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை 6.30 மணிக்கு பதிலாக 30 நிமிடங்கள் முன்கூட்டியே 6 மணிக்கு மெட்ரோ ரயில் தனது சேவையை தொடங்கும். அதேவேளையில் ஞாயிற்றுக்கிழமை என்றால் முதல் மெட்ரோ ரயில் காலை 7 மணி முதல் இயங்கும்.
அதேவேளையில் கடைசி மெட்ரோ ரயிலுக்கான நேரத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. கடைசி மெட்ரோ ரயில் பொம்மசந்திரா ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.42 மணிக்கு புறப்படும். அதேவேளையில் ஆர்வி ரோட்டில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் என்று பெங்களூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.
பெங்களூர் ஆர்வி ரோடு - பொம்மசந்திரா இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்கும்போது தினமும் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பயணிகள் பயணிப்பார்கள் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் அந்த எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
இப்போது தினமும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை பயணித்து வருகின்றனர். இப்படியான சூழலில் மெட்ரோ ரயில் இயக்கத்தை அதிகரிப்பது இன்னும் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications