கர்நாடக பள்ளிகளில் பகவத் கீதை பாடம்... எதிர்க்கட்சி தலைவர் காங்கிரஸின் சித்தராமையா வரவேற்பு
பெங்களூர்: ‛‛பள்ளியில் பகவத் கீதையை கற்பிப்பது வரவேற்கத்தக்கது. அறநெறி கல்வியை போதிப்பதில் எதிர்ப்பு எதுவுமில்லை. ஆனால் பள்ளியில் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும். பகவத் கீதை, குரான், பைபிள் ஆகியவற்றை நாங்கள் எதிர்க்கவில்லை‛‛ என கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி(காங்கிரஸ்) தலைவர் சித்தராமையா கூறினார்.
குஜராத் மாநில பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் பகவத்கீதை பாடமாக்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக கர்நாடக பள்ளிகளிலும் பகவத்கீதையை பாடமாக்கும் திட்டம் உள்ளது என அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ் பெங்களூரில் நேற்று கூறினார். முதல்வர், மாநில பாடநூல் கமிட்டி, நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சரியாக காட்டுங்கள்
இதற்கு கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை கன்னட மொழிக்கு டப்பிங் செய்ய உள்ளதாக கூறுகிறார்கள். எந்த படங்களை வேண்டுமானாலும் மொழிமாற்றம் செய்து வெளியிடலாம். ஆனால் படங்களில் உண்மையை கூற வேண்டும். யாருக்கும் பிரச்சனை ஏற்படாமல் இருக்க வேண்டும். காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அட்டகாசம், பண்டித்களின் பிரச்சனை, மற்றவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்க வேண்டும். சம்பவத்தின்போது எந்த அரசு என்ன செய்தது என்பதை சரியாக காட்ட வேண்டும்.

இதையும் காட்டலாமே
குஜராத் சம்பவத்தையும், லக்கிம்பூர் சம்பவத்தையும் திரைப்படமாக காட்டலாம். தியேட்டருக்கு சென்று நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. இதனால் தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்க்க மாட்டேன். மென்மையான இந்துத்துவாவை காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் அனைத்து மதங்களையும் சமமாக பார்க்கிறோம்.

வரவேற்பு
பள்ளிகளில் பகவத்கீதையை பாடமாக்குவதை வரவேற்கிறேன். இன்னும் இதில் கர்நாடக அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை. பகவத்கீதை, பைபிள், குரான் என எதையும் நான் எதிர்க்கவில்லை. பள்ளிகளில் அறநெறி தொடர்பான கல்விக்கு எதிர்ப்பு என்பது கிடையாது. இருப்பினும் பள்ளியில் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும். மேலும் அரசியலமைப்பின்படியும், மதசார்ப்பற்ற தன்மையுடனும் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனாவை விட மோசம்
இதேபோல், மைசூரில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான தன்வீர் சேட் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‛‛பாடத்திட்டத்தில் பகவத்கீதை என்பது கொரோனாவை விட மோசமானது. இந்த நடவடிக்கை மாணவர்களின் கல்வியை பாதிக்கும். நான் சின்ன வயதில் இருந்து சினிமா பார்ப்பது இல்லை. இன்று தி காஷ்மீர் பைல்ஸ் என்றும், நாளை குஜராத் பைல்ஸ் என்றும், அதன்பின் இன்னொரு பைல்ஸ் என்றும் படங்கள் வரும். எனக்கு சினிமா மீது ஆர்வம் கிடையாது. இதனால் தி காஷ்மீர் பைல்ஸ் படம் பார்க்கவில்லை'' என்றார்.

எந்த தவறும் இல்லை
மேலும் குடகு மாவட்டம் மடிகேரியில், மைசூரு பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா கூறுகையில், ‛‛குரான், பைபிள் ஆகியவை மத நூல்கள். ஆனால் பகவத் கீதை ஒரு மத நூல் அல்ல. பகவத் கீதையில் ஒழுக்கத்துக்கான பாடம் உள்ளது. வாழ்க்கைக்கான கருத்துகளை போதிக்கிறது. பகவத் கீதையை பாடப்புத்தகத்தில் சேர்ப்பதில் எந்த தவறும் இல்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications