கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம்..லிஸ்ட்டை இறுதி செய்த சித்தராமையா? பரபரக்கும் காங். எம்எல்ஏக்கள்
பெங்களூர்: அமைச்சரவையில் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதன் மூலம், நாடாளுமன்ற தேர்தலில் அந்த சமூகத்தினரின் ஓட்டு பாஜகவுக்கு செல்லாமல் காங்கிரசுக்கு கிடைக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் நம்புவதாக கூறப்படுகிறது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததுள்ளது. முதல்வர் பதவியை பெறுவதில் சித்தராமையாவுக்கும் டிகே சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் பரபரப்பு நீடித்தது.
இறுதியில் இந்த விவகாரத்தை காங்கிரஸ் மேலிடம் சுமூகமாக கையாண்டு முதல்வராக சித்தராமையாவையும் துணை முதல்வராக டிகே சிவக்குமாரையும் தேர்வு செய்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் பதவியேற்றுக்கொண்டனனர். 8 அமைச்சர்களுடன் பதவியேற்றுக்கொண்டனர். முதல்வர் விவகாரம் சுமூகமாக முடிந்தாலும் கர்நாடக காங்கிரசில் இன்னும் பரபரப்பு ஓய்ந்தபாடில்லை.
இதற்கு காரணம் அமைச்சரை இன்னும் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதால் அமைச்சர் பொறுப்பு கேட்டு மூத்த எம்.எல்.ஏக்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். கர்நாடக அமைச்சரவையில் மொத்தம் 34 இடங்கள் உள்ளன. அதில்,முதல்வருடன் சேர்த்து 10 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது. மீதம் 24 இடங்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த 24 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் தனித்தனியாக டெல்லிக்கு புறப்பட்டு மேலிடத்துடன் ஆலோசனை நடத்தியிருந்தனர். இது தொடர்பாக தொடர் ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவு எட்டப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, அமைச்சரவையில் சேர்க்க வேண்டிய 24 பேரின் பட்டியலையும் சித்தராமையா, டிகேசிவக்குமார் மற்றும் காங்கிரஸ் மேலிடம் இறுதி செய்து விட்டதாகவும் இன்று சித்தராமையா ராகுல் காந்தியை சந்தித்து ஒப்புதல் பெற்ற பிறகு அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
அமைச்சரவையில் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதன் மூலம், நாடாளுமன்ற தேர்தலில் அந்த சமூகத்தினரின் ஓட்டு பாஜகவுக்கு செல்லாமல் காங்கிரசுக்கு கிடைக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் நம்புவதாக கூறப்படுகிறது. இதனால் எம்.பி.பட்டீல் போக, இன்னும் 5 முதல் 6 பேருக்கு லிங்காயத் சமூகத்தினருக்கு வாய்ப்பளிகக காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications