கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா? கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன?
பெங்களூர்: அரசியலமைப்பின் 10 வது அட்டவணையின் கீழ், தங்களுக்கு வழங்கப்பட்ட விப் பிறப்பிக்கும் உரிமை உச்சநீதிமன்றத்தால் மீறப்பட்டுள்ளதாக, கர்நாடக காங்கிரஸ் கட்சி சட்டசபை குழு தலைவர் சித்தராமையா சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
வழக்கமாக, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக விப் வழங்கப்படும். எம்.எல்.ஏ.க்கள் அதைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், அவர்கள் தகுதியிழப்பை எதிர்கொள்ள வேண்டி வரும்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அந்த எம்.எல்.ஏ தற்போதுள்ள சட்டசபை காலகட்டத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது. தற்போதைய சட்டசபை காலத்தில் அவர் அமைச்சராக முடியாது. ஏனெனில் அவரால் மேலவை உறுப்பினராக கூட பதவி வகிக்க முடியாது. அடுத்த சட்டசபை பொதுத் தேர்தலில்தான் போட்டியிடலாம்.
எம்.எல்.ஏக்கள் அல்லது எம்.பி.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது 'ஆயா ராம், கயா ராமா' கட்சி தாவல்களை தடுத்து நிறுத்ததான். ஹரியானா எம்.எல்.ஏ., கயா லால் 1967ல் ஒரே நாளில் மூன்று முறை தனது கட்சியை மாற்றினார். இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு பின்னர் இந்த சொற்றொடர் பிரபலமாகிவிட்டது. இதுபோன்ற சூழ்நிலைகளைத் தடுக்க கட்சித் தாவல் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
கட்சித் தாவல் தடைச் சட்டம் என்றால் என்ன:
1985 ஆம் ஆண்டில், அரசியலமைப்பில் பத்தாவது அட்டவணை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சித் தாவலுக்காக, தகுதி நீக்கம் செய்யப்படலாம். ஒரு உறுப்பினர் தானாக முன்வந்து தனது கட்சியின் உறுப்பினர் அந்தஸ்தை கைவிட்டால் அல்லது வாக்களிப்புகளின்போது கட்சியின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாவிட்டால் தகுதி நீக்கத்திற்கு தகுதியானவராக கருதப்படுவார். தனது கட்சியின் கொறடா உத்தரவை மீறும் உறுப்பினர் ஒருவர் சட்டசபையின் உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படலாம்.
கட்சித் தாவல் சட்டம் எப்போது பாயாது?:
குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி இணைப்புக்கு ஆதரவாக இருந்தால், அவர்கள் முடிவுக்கு சட்டம் அனுமதிக்கிறது. இதேபோன்ற ஒரு சூழ்நிலை கோவாவிலும் இப்போது நடந்தது. 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் இணைந்தனர். மீதம் 5 பேர்தான் என்பதால், பாஜகவில் இணைந்தவர்கள் மீது சட்டம் பாயவில்லை.
திருத்தம்:
2003 இல், சட்டத்தில் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. முதன்முதலில் சட்டம் இயற்றப்பட்டபோது, ஒரு, அரசியல் கட்சியில் பிளவு ஏற்பட்டால், கட்சியின் மூன்றில் ஒரு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு தனி குழுவை உருவாக்கினால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று ஒரு விதி இருந்தது. இது குரூப் குரூப்பாக சேர்ந்து கட்சி தாவ வழிவகுத்தது, எனவே இந்த விதி நீக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications