அப்பாடா.. 100 அடியை கடந்து மெல்ல உயரும் கேஆர்எஸ் அணை நீர்மட்டம்! இன்றைய நிலவரம் இதுதான்
பெங்களூர்: கர்நாடகா-தமிழ்நாடு இடையே காவிரி பிரச்சனை விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் கர்நாடகாவில் அமைந்துள்ள காவிரி அணையின் நீர்மட்டம் என்பது மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று 100 அடியை கடந்த நிலையில் இன்று அணைக்கான நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அக்டோபர் 15ம் தேதி வரை காவிரியில் தமிழகத்துக்கு 3 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தற்போது தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பந்த், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் பெங்களூரில் இருந்து கேஆர்எஸ் அணைக்கு வாகனங்களில் ஊர்வலம் சென்றனர். தமிழகத்தக்கு தண்ணீர் திறப்பதை உடனடியாக கர்நாடகா அரசு நிறுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும் காவிரிக்கு முக்கிய நீர்ஆதாரமாக உள்ள கேஆர்எஸ் அணை நீர்மட்டம் குறித்த விஷயத்தில் கர்நாடகா அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றார்.
இந்நிலையில் தான் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கடந்த 3 நாட்களாக கேஆர்எஸ் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. நேற்று கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்து 100.36 அடியாக இருந்தது. மொத்தம் 124.8 அடி உயரம் கொண்ட கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் தான் இன்று கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 100.82 அடியாக அதிகரித்து இருந்தது. நேற்றைய தினம் அணைக்கு உள்ளே வினாடிக்கு 9,052 கனஅடி நீர் வந்த நிலையில் இன்று அதன் அளவு என்பது குறைந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது தான் இதற்கு காரணமாகும். அதன்படி இன்று கேஆர்எஸ் அணைக்கு உள்ளே வினாடிக்கு 5,842 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,489 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது
கேஆர்எஸ் அணை முழுவதுமாக 124.80 அடியை தொட்டால் அணையில் 49.452 டிஎம்சி தண்ணீர் தேக்க முடியும். தற்போது நீர்மட்டத்தை பொறுத்தமட்டில் அணையில் 23.095 டிஎம்சிக்கும் அதிகமாக தண்ணீர் இருக்கிறது. மேலும் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதில் இன்னொரு முக்கிய அணையான கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணையின் நீர்மட்டமும் மெல்ல உயர்ந்து வருகிறது. கர்நாடகா-காவிரி இடையேயான மோதலுக்கு நடுவே இந்த அணைகளின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருவது ஓரளவு ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications