தொற்றிய பரபரப்பு.. தமிழக-கர்நாடகா எல்லையில் பஸ்-லாரிகள் நிறுத்தம்! பெங்களூர் பந்த் -மக்கள் பாதிப்பு
பெங்களூர்: பெங்களூரில் இன்று பந்த் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி ஏற்பட்டுள்ள பதற்றத்தால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அரசு, தனியார் பஸ்கள், லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பாதிப்பை சந்திப்பதோடு, சரக்கு போக்குவரத்து என்பது பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகா அரசு தமிழ்நாட்டுக்கு காவிரியில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட்டுள்ளது. ஆனால் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் வறட்சி ஏற்பட்டுள்ளது. அணைகளில் தண்ணீர் இல்லை.

எனவே கர்நாடகா அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என பல அமைப்பினர் கோரிக்கை வைத்து பந்த் நடத்தி வருகின்றனர். மண்டியா மாவட்டத்தில் பந்த் நடந்து முடிந்துள்ளது. இன்று பெங்களூரில் பந்த் தொடங்கி உள்ளது.
கர்நாடகா ஜல சம்ரக்சன சமிதி தலைமையில் பெங்களூர் பந்த் நடப்பதாக கரும்பு விவசாயிகள் அமைப்பின் தலைவர் குருபூர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இன்றைய பெங்களூர் பந்த்துக்கு 100க்கும் அதிகமான அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் தமிழ்நாடு-கர்நாடகா இடையே பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் பெங்களூர் நகரில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதோடு பெங்களூர் நகரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெங்களூர் பந்த் அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு முதல் பஸ்கள் பெங்களூருவுக்குள் செல்லவில்லை. இதையடுத்து அந்த பஸ்களில் பயணித்த மக்கள் அத்திப்பள்ளி எல்லையை கடந்து நடந்து சென்று பிஎம்டிசி பஸ்களில் பயணித்து பெங்களூருவில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் லாரிகள் கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு நோக்கி கர்நாடகா வழியாக வட மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளியில் லாரிகள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
அதோடு தமிழ்நாடு-கர்நாடகா இடையேயான சரக்கு போக்குவரத்து மட்டுமின்றி பெங்களூர் வழியாக மகாராஷ்டிரா உள்பட வடமாநிலங்களுக்கு செல்லும் லாரிகளில் கொண்டு செல்லும் சரக்கு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ்களில் பயணிக்கும் மக்கள் மற்றும் சரக்குகளை எதிர்பார்க்கும் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications