காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் திடீர் ஒத்திவைப்பு! தமிழகத்தின் எதிர்ப்புக்கு நடுவே புது தேதி அறிவிப்பு
பெங்களூர்: நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் திடீரென்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த கூட்டம் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
கர்நாடகம்-தமிழ்நாடு இடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைக்கு மத்தியில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது.
இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் புதிதாக கர்நாடகம் அணை கட்டினால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது. இதனால் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திப்பட்டு வருகிறது.
காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க கூடாது:பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்
இந்நிலையில் தான் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் ஜூன் 17ம் தேதி அதன் தலைவர் எஸ்கே ஹல்தேர் தலைமையில் நடைபெற உள்ளது. என அறிவிக்கப்பட்டது. மேலும் கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்ற தகவல் வெளியானது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழகம்
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில் கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க அனுமதி கூடாது என கூறப்பட்டு இருந்தது. இதனை கர்நாடக அரசு கடுமையாக எதிர்த்தது. இதுபற்றி கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‛‛மத்திய அரசு எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு எந்த அதிகார வரம்பும் இல்லை. இந்த ஆணையம் உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் அமைக்கப்பட்ட அமைப்பாகும். இந்த ஆணையத்திற்கு, எந்தவிதமான அணை கட்டவும், நீர்ப்பாசன திட்டங்களுக்கும் அனுமதி வழங்க தனி அதிகாரம் உள்ளது'' என தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்
இதற்கிடையே மேகதாது அணை தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதம் கூடாது என தமிழக முதல்லவர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், "காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக் கூடாது. இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு வழங்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டு இருந்தது.
திடீர் ஒத்திவைப்பு
இந்நிலையில் டெல்லியில் நாளை மறுநாள் நடைபெற இருந்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாளுக்கு பதில் வரும் 23ம் தேதி கூட்டம் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.