குமாரசாமி அரசு கவிழ்வதை கூடவே இருந்து ரசித்த சித்தராமையா?
பெங்களூரு: குமாரசாமி அரசு கவிழ்வதைப் பற்றி சித்தராமையா உள்ளிட்ட பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் எந்த ஒரு கவலையுமேபடவில்லை என்கின்றன கர்நாடகா அரசியல் வட்டாரங்கள்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் யார் என்பதில் இன்னமும் குழப்பம் நீடிக்கிறது. இந்த குழப்பத்துக்கு இடையே ஜேடிஎஸ்-காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அள்ளிக் கொண்டு போய் மும்பையில் அடைத்து வைத்தது பாஜக.
இந்த எம்.எல்.ஏக்களை மீட்பதில் காங்கிரஸின் சிவகுமர் மட்டும்தான் வேகம் காட்டினார். மும்முரமாக இருந்தார். சட்டசபையிலும் கூட அவர்தான் ஆவேசமாக சாபமிட்டார். இத்தனைக்கும் மும்பைக்கு தப்பி ஓடிய எம்.எல்.ஏக்கள் பலரும் சித்தராமையாவுக்கு மிக நெருக்கமானவர்கள் என கூறப்படுகிறது.
சித்தராமையா
ஆனாலும் சித்தராமையா உள்ளிட்டோர் எப்போதும் போல கூலாகத்தான் இருந்தனர். சித்தராமையா மற்றும் அவரது ஆதரவாளர்களைப் பொறுத்தவரை குமாரசாமி அரசு கவிழட்டும் என்றுதான் விரும்பியிருக்கின்றனர்.
சட்டசபையில் கிண்டல்
இதனைத்தான் சட்டசபையில் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் பேசும் போது, ராஜினாமே கொட்டு ஹோகலு ஹேலி அதாவது ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டியதுதானே என கிண்டலடித்திருக்கிறார். இது சட்டசபை மைக்கில் அப்படியே எதிரொலித்தது.
காங்கிரஸாருக்கு விருப்பம் இல்லை
அப்போது சட்டசபையில் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஸ்வர் ஆகியோர் இல்லை. இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கையில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் இந்த கூட்டணியால் ஆதாயம். காங்கிரஸ் கட்சிக்கு எந்த ஒரு ஆதாயமுமே இல்லை.
ஜேடிஎஸ்-க்கு எதிர்ப்பு
பொதுவாக நாங்கள் யாருமே ஜேடிஎஸ் கூட்டணியை விரும்பவில்லை. எங்களைப் பொறுத்தவரை மைசூர் பகுதியில் காங்கிரஸை வலிமையாக்க வேண்டும் என நினைக்கிறோம். ஜேடிஎஸ் கட்சியை சுமந்து கொண்டிருந்தால் அது நடக்காது என்கின்றனர்.
அதிருப்தியில் ஜேடிஎஸ்
அதாவது கூடவே இருந்து குமாரசாமி அரசு கவிழ்வதை கமுக்கமாக பார்த்து சிரித்திருக்கிறார் சித்தராமையா. அவரைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சித் தலைவராக எந்த பிரச்சனையும் இல்லாமல் வழக்கம் போல பணிகளை தொடருகிறார். இதனால் ஜேடிஎஸ் கடும் அதிருப்தியில் இருக்கிறதாம்.