அடங்காத ராசாக்களே.. வெளியில் வந்தா சங்குதான்.. காத்திருக்கும் கொரோனா.. கலக்கும் கர்நாடக போலீஸ்!
கொரோனா வைரஸ் ஹெல்மெட் விழிப்புணர்வு வீடியோ வைரலாகி வருகிறது
பெங்களூரு: அடங்காத ராசாக்கள் ஊரடங்கு தடையை மீறி வெளியே வந்தால் "சங்கு"தான் என்பதை வலியுறுத்தும் விதமாக டிராபிக் போலீசார் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.. தேவையில்லாமல் வெளியில் சுற்றினால், கொரோனா தாக்கி பரலோகம் போய் சேருவோம் என்பதையே விழிப்புணர்வு வீடியோவாக கர்நாடக போலீசார் வெளியிட்டுள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.. நாடே வீட்டுக்குள் முடங்கி இருக்கும் நிலையில், சிலர் அடங்காமல் வெளியில் சுற்றி வருகின்றனர்.

ஊரடங்கு அமலுக்கு வந்த முதல் நாளே, தமிழகத்தில் பலர் பைக்கில் சுற்றி வந்தனர்.. அதனால் போலீசார் லத்தியால் கண்ணை மூடிக்கொண்டு சரமாரியாக இவர்களை அடிக்கும் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை தந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனங்களும் எழுந்தன.. மக்கள் மீது எப்படி போலீசார் கை வைக்கலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டது... சோஷியல் மீடியாவிலும் இவ்விவகாரம் பெரிதாக வெடித்தது.. அதனால் மறுநாளே போலீசார் தங்கள் போக்கை மாற்றி கொண்டனர்.
அண்ணாசாலையில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களிடம் ஒரு டிராபிக் போலீசார் காலில் விழுந்து கெஞ்சியது எல்லா அதிருப்திகளையும் அடியோடு சாய்த்துவிட்டது.. அடித்தால்தானே தப்பு, போடுங்க தோப்புக்கரணம் என்று அத்துமீறுபவர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டு வருகிறது... பல இடங்களில் இனிமேல் விதிகளை மீற மாட்டேன் என்று உறுதிமொழி எடுக்க சொல்லி வருகின்றனர். மேலும் சில இடங்களில் குட்டிக்கரணம் சொல்லியும் எச்சரித்து உள்ளனர்.

தமிழகத்தில் இந்நிலை என்றால், கர்நாடகாவில் வேற லெவலில் டிராபிக் போலீசார் தண்டனை தந்து வருகின்றனர்... அங்கேயும் அடங்காத ராசாக்கள் உள்ளனர்.. ஊடரங்கு உத்தரவை மீறி வாகனத்தில் செல்வோருக்கு உயிர் பயம் காட்டி வருகிறார்கள்.. இது சம்பந்தமான விழிப்புண்ரவு வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

ஒரு சாலையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கையில் மைக் ஒன்றை வைத்து கொண்டு வெளியில் யாரும் வரவேண்டாம், மீறி வந்தால் கொரோனா வைரஸ் தாக்கும் என்று எச்சரித்து வருகின்றனர். அவர்களில் சில போலீசார் கொரோனா வைரஸ் வடிவிலான ஹெல்மட்டைஅணிந்து கொண்டு பக்கத்திலேயே நிற்கிறார்கள்.
போலீசார் எச்சரித்து கொண்டிருந்தபோதே, இளைஞர் ஒருவர் பைக்கில் வருகிறார்.. அப்போது அவரை தடுத்து நிறுத்திய போலீசார் கொரோனாவைரஸ் ஹெல்மெட்டை இளைஞருக்கு எடுத்து தலையில் மாட்டுகிறார்கள்.. என்ன நடக்கிறது என்று புரியாமல் இளைஞர் விழித்து நிற்க, திடீரென சாவு மணி அடிக்கப்படுகிறது.. சங்கும் ஊதப்படுகிறது.
சாவு மணி அடிப்பதும், சங்கு ஊதுவதும் போலீசார்களே.. தடையை மீறி வெளியே வந்தால் வைரஸ்தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என்பதே இந்த விழிப்புணர்வின் நோக்கமாக உள்ளது.. இந்த மரண பயம் காட்டும் வீடியோதான் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications