விவசாயிகள், சலவையாளர், முடிதிருத்துவோர், ஓட்டுநர்களுக்கு ரூ. 1610 கோடி- நம்பிக்கை தந்த எடியூரப்பா
பெங்களூரு: கொரோனா லாக்டவுன்களால் வாழ்வாதாரத்தை பறிகொடுத்து பெரும் துயரத்தில் இருக்கும் பல்வேறு துறை சார் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு ரூ1,610 கோடி நிதி உதவியை அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 54 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 40 நாட்கள் லாக்டவுன் முடிவடைந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்வுகளுடன் மேலும் 14 நாட்கள் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இந்த லாக்டவுன் காலத்தில் அனைத்து தரப்பினரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. இதனால் அனைத்து தரப்புக்கும் உதவும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள், நிதி உதவிகளை வழங்கி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசும் இதேபோல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் ரூ1610 கோடி உதவித் திட்டங்களை மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்திருக்கிறார். இது வாழ்வாதாரம் இல்லாமல் தவித்த மக்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. முதல்வர் எடியூரப்பா வெளியிட்ட அறிவிப்புகள்.
பூ விவசாயிகளுக்கு ரூ25,000
லாக்டவுன் காலத்தில் கோயில்கள் பூட்டப்பட்டுள்ளன. இதேபோல் எந்த ஒரு விழாவும் நடைபெறவில்லை. இதனால் பூக்களுக்கான தேவை ஏற்படவில்லை. இது பூ விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது. ஆகையால் பூ விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ25,000 நஷ்ட ஈடு வழங்க கர்நாடகா அரசு முடிவுசெய்துள்ளது. இதேபோல் காய்கறி, பழங்களை பயிரிட்ட விவசாயிகளுக்கு உதவுவது தொடர்பாகவும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ5000
கர்நாடகாவில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஏற்கனவே ரூ2,000 வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 11.80 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 15.80 லட்சம்பேர். தற்போது அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் மேலும் ரூ3,000 வழங்கப்படும். இது அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ5,000 கிடைக்கும்.
சலவையாளர்கள், முடிதிருத்துவோர்
சலவையாளர்கள் மற்றும் முடிதிருத்துவோரும் வாழ்வாதரத்தை இழந்துள்ளனர். இவர்களுக்கு தலா ரூ5,000 வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 60,000 சலவையாளர்களும் 2.30 லட்சம் முடிதிருத்துவோரும் பயனடைவர். முடிதிருத்தும் தொழிலில் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கு மொழி பேசும் மக்கள் பெரும்பாலானோர் ஈடுபட்டிருக்கின்றனர். கைத்தறி நெசவாளர்களுக்கும் ரூ2,000 உதவித் தொகை வழங்கப்பட இருக்கிறது. மொத்தம் 54,000 கைத்தறி நெசவாளர்கள் பயனடைய உள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் உதவி
இதேபோல் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கும் கர்நாடகா அரசு உதவித் தொகையை அறிவித்திருக்கிறது. கர்நாடகாவில் தமிழர்களே பெரும்பாலான ஓட்டுநர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கும் தலா ரூ5,000 வழங்கப்படும். மொத்தம் 7.5 லட்சம் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் இதன் மூலம் பயனடைய உள்ளனர்.
தொழில்நிறுவனங்களுக்கு சலுகை
சிறு மற்றும் பெரும் தொழில்நிறுவனங்களுக்கும் கர்நாடகா அரசு சலுகைகளை அறிவித்துள்ளது. சிறுதொழில் நிறுவனங்களை நடத்துவோரின் 2 மாத மின்கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெருந்தொழில் நிறுவனங்கள் மின்கட்டணம் செலுத்த 2 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் மின் கட்டணம் செலுத்த ஜூன் 30-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா அரசின் இந்த அறிவிப்பு வாழ்வாதாரம் இல்லாமல் லாக்டவுன் காலத்தில் துயரத்தில் இருந்த மக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது.