கோவிலுக்குள் எப்படி வரலாம்? கன்னத்தில் அறைந்து.. தள்ளிவிட்டு.. பெங்களூரில் தலித் பெண் மீது தாக்குதல்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் கோயிலுக்குள் நுழைந்த தலித் சமூகத்தை சேர்ந்த இளம்பெண்ணை கோயில் நிர்வாகி ஒருவர் கடுமையாக தாக்கி தர தரவென வெளியே இழுத்து சென்று விட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் தலித்துக்கள் மற்றும் பழங்குடியின சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது பெங்களூருவின் அம்ருதஹள்ளி பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் இளம்பெண் தரிசனம் செய்வதற்காக சென்றிருக்கிறார். கோயிலில் கூட்டம் அதிகம் இல்லாத நேரம் அது. இந்நிலையில், அங்கு வந்த கோயில் நிர்வாகி இளம்பெண்ணிடம் ஏதோ பேசியிருக்கிறார்.
பின்னர் அங்கிருந்து அவரை வெளியே போக சொல்லியிருக்கிறார். ஆனால் தான் ஏன் வெளியே செல்ல வேண்டும்? என்றும் சாமி குடும்பிடதானே வந்திருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். ஆனால் கோயில் நிர்வாகி இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அந்த பெண்ணின் கையை பிடித்து வெளியே இழுத்து வர முயன்றுள்ளார். ஆனால் அப்பெண் வெளியே வரவில்லை. தொடர்ந்து கோயில் நிர்வாகியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தாக்குதல்
இதனால் கோபமடைந்த கோயில் நிர்வாகி அப்பெண்ணை சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளார். உடனே அப்பெண் தரையில் அமர்ந்துவிட்டார். அப்போதும் கூட விடாமல் அப்பெண்ணை தர தரவென இழுத்து கோயில் சன்னதியிலிருந்து வெளியேற்றியுள்ளார். அப்போதும் அப்பெண் மீண்டும் உள்ளே நுழைய, கோயில் அதிகாரி அப்பெண்ணின் முடியை பிடித்து இழுத்து வெளியே தள்ளியுள்ளார். பின்னர் கண்ணத்தில் அறைந்து அப்பெண்ணை வெளியே போக சொல்லியுள்ளார். அப்பெண் அப்போதும் கோயிலிருந்து வெளியேறாத நிலையில், கம்பை எடுத்துக்கொண்டு கோயில் நிர்வாகி தாக்க ஓடி வந்துள்ளார்.
பூசாரி
இதுவரை இந்த சம்பவங்கள் அனைத்தையும் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கோயில் பூசாரிகளில் ஒருவர் கம்பை கண்டவுடன் கோயில் நிர்வாகியை தடுக்க முற்பட்டுள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாத கோயில் நிர்வாகி அப்பெண்ணை தாக்க விரட்டியுள்ளார். இவையனைத்தும் கோயிலில் இருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியுள்ளது. கோயிலில் பக்தர்களுக்கு எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது என்று கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டிருந்தும் இந்த உத்தரவுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகம் காற்றில் பறக்கவிட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகிகளுக்கு எதிராக அப்பெண் புகார் அளித்திருக்கிறார்.
இதேபோல
கர்நாடக மாநிலத்தில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர் சாமி சிலையை தொட்டதற்காக தலித் சிறுவனுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள உள்ளேரஹல்லியில் பூதம்மா கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலுக்கு கிராமத்தில் இருக்கும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் செல்லக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு ஒன்று நடைமுறையில் இருந்து வருகிறது. மீறி சென்றால் கடவுளின் சாபத்திற்கு ஆளாகி விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
அபராதம்
இவ்வாறு இருக்கையில், கடந்த செப்டம்பர் மாதம் தலித் சமூகத்தை சேரந்த சிறுவன் ஒருவன் கோயிலுக்குள் சென்றுள்ளான். மட்டுமல்லாது கருவறைக்குள் சென்று சாமி சிலையையும் தொட்டுள்ளான். அவ்வளவுதான் பஞ்சாயத்து வெடித்திருக்கிறது. சிறுவனை சிலர் தாக்கியுள்ளனர். பின்னர் ஊர் பஞ்சாயத்தில் வைத்து சிறுவன் செய்தது தவறு என்றும், அவனது குடும்பத்தினருக்கு ரூ.60 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பஞ்சாயத்து நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.