திருமணமானாலும் தந்தைக்கு மகள்- எக்ஸ் சர்வீஸ்மென் கோட்டாவை மகளும் பெறலாம்: கர்நாடகா உயர்நீதிமன்றம்
பெங்களூர்: திருமணமானாலும் ஒரு பெண் தந்தைக்கு மகள்தான்; முன்னாள் ராணுவ வீரர் கோட்டாவை திருமணமாகி இருந்தாலும் மகனைப் போல மகளும் பெற முடியும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா பட்டீல். இவரது தந்தை ரமேஷ் கந்தப்பா, ராணுவத்தில் சுபேதாரராகப் பணியாற்றினார். 2001-ம் ஆண்டு ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவர் வீரமரணம் அடைந்தார். கண்ணிவெடி அகற்றும் பணியின் போது ரமேஷ் கந்தப்பா வீர மரணத்தைத் தழுவினார்.
இதனைத் தொடர்ந்து கர்நாடகா மாநில அரசின் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருக்கிறார். மேலும் முன்னாள் ராணுவ வீரரின் மகள் என்ற அடையாள அட்டையை ராணுவ வீரர்களுக்கான நல வாரியத்திடமும் பிரியங்கா கோரியிருந்தார்.
ராணுவ வீரர்களுக்கான நலவாரியத்தில் (Kendriya Sainik Board) பிரியங்கா கொடுத்த மனுவில், என்னுடைய தந்தை வீர மரணம் அடைந்த போது எனக்கு 15 வயது. தற்போது பட்டப்படிப்பு நிறைவு செய்திருக்கிறேன். கர்நாடகா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையின் படி உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பத்திருக்கிறேன். ஆகையால் முன்னாள் ராணுவ வீரரின் மகள் என்ற அடையாள அட்டை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால் ராணுவ வீரர்களுக்கான நல வாரியமோ, பிரியங்கா பட்டீலுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆகையால் திருமணமான பெண்ணுக்கு முன்னாள் ராணுவ வீரரின் மகள் என்ற அடையாள அட்டை வழங்க விதிகளில் இடம் இல்லை என பதில் கொடுத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியங்கா பட்டீல், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மிக முக்கியமான வழக்கை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா விசாரித்தார். இந்த வழக்கில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் சாந்தி பூஷண், ஒரு பெண் திருமணமாகிவிட்டால் முன்னாள் ராணுவ வீரரரை சார்ந்திருகக்க் கூடியவர் என்கிற உரிமையை இழந்துவிடுகிறார் எனக் குறிப்பிட்டார். பிரியங்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே உரிமைதான் வழங்கப்பட வேண்டும். ஆனால் பெண்ணுக்கு திருமணத்தைக் காரணம் காட்டி உரிமை மறுப்பது என்பது அரசியல் சாசனத்தின் 14-வது சரத்தை மீறுவதாகும் என சுட்டிக் காட்டி வாதிட்டார்.
இவ்வழக்கில் நீதிபதி நாகபிரசன்னா பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சங்கள்: திருமணமான ஆண் ஒருவர், எப்போதும் தந்தைக்கு மகனாகவே இருக்கிறார். திருமணமான பெண் மட்டும் எப்படி தந்தைக்கு மகளாக இல்லாமல் இருக்க முடியும்? திருமணமே ஆனாலும் மகனைப் போல தந்தைக்கு அந்த பெண் மகள்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.
பெண் என்பதற்காக ஒருவருக்கு முன்னாள் ராணுவ வீரர் மகள் என்ற அடையாள அட்டை வழங்க முடியாது என்கிற விதிகளில் திருத்தம் செய்தாக வேண்டும். கடந்த காலங்களில் அல்லது காலங்காலமாக பின்பற்றுகிற ஒரு நடைமுறை இப்போதும் அப்படியே இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அப்படியான ஒன்றை நாம் அனுமதிப்பது பெண்களின் சமத்துவத்துக்கு எதிரான போக்காகும்.
மேலும் முன்னாள் ராணுவ வீரர்களை ஆங்கிலத்தில் எக்ஸ் சர்வீஸ்மென் என ஆண் பாலைக் குறிக்கும் வகையில் மட்டுமே அழைக்கிறோம். ராணுவத்தில் இருபாலினத்தவருமே பணிபுரிகின்றனர். ஆகையால் இனி சர்வீஸ்மென் என்ற ஆண் பால் சொல்லை பயன்படுத்தக் கூடாது. எக்ஸ் சர்வீஸ் பெர்சனல் Ex-service personnel என அழைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி நாக பிரசன்னா உத்தரவிட்டார்.