எடியூரப்பாவின் ரூ. 40,000 கோடி கொரோனா ஊழல்- பாஜக மேலிடத்துக்கும் "ஷேர்".. கர்நாடகா அமைச்சர் 'திடுக்'
பெங்களூர்: கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சியில் நடந்த ரூ. 40,000 கோடி கொரோனா ஊழலில் டெல்லி பாஜக மேலிடத் தலைவர்களுக்கும் பங்கு போனதாக கர்நாடகா அமைச்சர் பிரியங் கார்கே திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநில பாஜக எம்.எல்.ஏ. பசன்கவுடா பாட்டீல் யத்னால். கர்நாடகா மாநில பாஜக தலைவர் பதவி கிடைக்காத கோபத்தில் முந்தைய எடியூரப்பா ஆட்சியில் நடந்த ஊழல்களை பகிரங்கப்படுத்தி வருகிறார்.

யத்னால் பகிரங்கப்படுத்தி வரும் ஊழல்களில் ஒன்றுதான் எடியூரப்பா ஆட்சி கால 'கொரோனா' ஊழல். எடியூரப்பா ஆட்சியில் கொரோனா பரவலைப் பயன்படுத்தி மட்டும் ரூ. 40,000 கோடி ஊழல் நடந்தது என்கிறார் பாஜக எம்.எல்.ஏ. யத்னால்
அதாவது ரூ45 மதிப்பிலான 1 மாஸ்க் விலையை ரூ485-க்கு கொள்முதல் செய்தது எடியூரப்பா அரசு; அதேபோல மருத்துவமனைக்கு ஒரு படுக்கையை வாடகைக்கு எடுத்துவிட்டு வாடகை ரூ20,000; அதே படுக்கையை வாங்கியதாகவும் ரூ20,000 கணக்கு எழுதி கொள்ளையடித்திருக்கின்றனர். ஒரு கொரோனா நோயாளிக்கு ரூ8 முதல் ரூ10 லட்சம் வரை செலவு செய்ததாகவும் கணக்கு எழுதி மொத்தம் ரூ40,000 கோடி கொள்ளையடித்திருக்கிறார்கள் என சொந்த கட்சி ஆட்சியின் ஊழலையே பாஜக எம்.எல்.ஏ. யத்னால் அக்குவேறாக ஆணிவேறாக பேசி வருவது பாஜகவை ரொம்பவே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா, பாஜக ஆட்சிக் கால ஊழல்களுக்கு பாஜக எம்.எல்.ஏ.வின் இந்த வாக்குமூலமே சாட்சி. கொரோனா காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்த விசாரணை கமிஷன் முன்பாக பாஜக எம்.எல்.ஏ. யத்னால் இந்த ஆதாரங்களை கொடுக்க வேண்டும் என்றார்.
இதனிடையே கர்நாடகா அமைச்சர் பிரியங் கார்கே இன்னொரு திடுக்கிடும் குண்டை வீசியிருக்கிறார். பாஜகவின் கொரோனா ஆட்சிக் கால ஊழல் ஆவணங்கள் அனைத்த்ம் விசாரணை கமிஷன் முன்பாக தாக்கல் செய்யப்படும். இந்த ரூ40,000 கோடி ஊழலில் டெல்லியில் உள்ள பாஜக மேலிடத் தலைவர்களுக்கும் பங்கு போயிருக்கிறது என்கிறார் பிரியங் கார்கே. கர்நாடகா அரசியலில் பாஜக ஆட்சிக் கால ரூ40,000 கோடி கொரோனா ஊழல் பெரும் பிரளயத்தை கிளப்பிக் கொண்டிருக்கிறது என்கின்றன அம்மாநில அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications