மரண விளிம்புக்கே போன பெண்.. யோசிக்காமல் டாக்டர் செய்த சம்பவம்.. தேர்தல் பூத்தில் நெகிழ்ச்சி
பெங்களூர்: லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க சென்ற பெண் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் அங்கு இருந்த டாக்டர் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. மொத்தம் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதற்கட்டமாக 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. அதன்பிறகு மே 7 ம் தேதி மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

இன்றைய தினம் பெங்களூர் உடுப்பி - சிக்கமகளூர், ஹாசன், தட்சின கன்னடா, சித்ரதுர்கா, தும்கூர், மண்டியா, மைசூர், சாமராஜநகர், பெங்களூர் புறநகர், பெங்களூர் வடக்கு, பெங்களூர் மத்தியம், பெங்களூர் தெற்கு, சிக்பள்ளாப்பூர், கோலார் ஆகிய தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடக்கிறது.
காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 6 வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பெங்களூர் ஜேபி நகர் 8 வது ஸ்பேஸில் உள்ள ஜம்போ சவாரி தின்னே என்ற பகுதியில் உள்ள பூத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ஓட்டளிக்க வரிசையில் நின்ற பெண்ணுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது பொம்மசந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் கணேஷ் சீனிவாச பிரசாத் அங்கு ஓட்டுப்போட சென்றார். உடனடியாக அவர் அந்த பெண்ணை பரிசோதித்தனர். அப்போது அந்த பெண்ணின் உடலில் பல்ஸ் என்பது மிகவும் குறைவாக இருந்தது. மேலும் அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர் கணேஷ் சீனிவாச பிரசாத் அவருக்கு சிபிஆர் சிகிச்சையை வழங்கினார். இதனால் அவர் மீண்டார். அதன்பிறகு அங்கு தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஜுஸ் வழங்கினர். ஆம்புலன்சுக்கு போன் செய்யப்பட்டது. 5 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்த பிறகு அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளார்.
இதுபற்றி டாக்டர் கணேஷ் சீனிவாச பிரசாத் கூறுகையில், ‛‛ஓட்டளிக்க வந்த பெண்ணுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மயங்கி விழுந்த நிலையில் நாங்கள் பிடித்தோம். உடனடியாக சிபிஆர் சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்காமல் இருந்தால் அவரை நாம் இழந்திருப்போம்'' என்றார். இந்நிலையில் தான் உரிய நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர் கணேஷ் சீனிவாச பிரசாத்தை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications