என்னது கர்நாடகா தேர்தலில் தென்னாப்பிரிக்கா வாக்குப் பதிவு இயந்திரங்களா? தேர்தல் ஆணையம் பதில்
பெங்களூர்: தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீரமைக்கப்படாமல் அப்படியே கர்நாடகா தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் தெரிவித்த புகாரை இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கர்நாடகா தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவாகின. சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகங்கள் ஏற்பட்டு அரசியல் கட்சியினரால் உடைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

இதனிடையே தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், அப்படியே எந்த ஒரு மறு சீரமைப்பும் செய்யப்படாமல் கர்நாடகா தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டுவிட்டன என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பியது காங்கிரஸ். இதனால் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் இதனை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. மேலும் புதியதாக தயாரிக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களைத்தான் கர்நாடகா தேர்தலுக்காக பயன்படுத்தினோம்; அவை அனைத்துமே புதிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications