ராபின் உத்தப்பாவுக்கு நிம்மதி.. கைது வாரண்ட்டுக்கு இடைக்கால தடை போட்ட கர்நாடகா ஹைகோர்ட்
பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தனது நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சுமார் ரூ.24 லட்சம் வழங்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக உத்தப்பாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா. இவர் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக விளையாடினார். தற்போது அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று வர்ணனையாளராக வலம் வருகிறார்.

ராபின் உத்தப்பா கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். அவரது சொந்த ஊர் குடகு மாவட்டமாகும். இதற்கிடையே தான் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு சென்டாரஸ் பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவன நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்தார்.
நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் இருந்து இபிஎஃப்ஓ எனும் வருங்கால வைப்பு நிதி திட்டத்துக்காக மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால் உத்தப்பாவின் நிறுவனத்தில் இருந்து பணியாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு நிதி பங்களிப்பு செய்யப்படவில்லை. மொத்தம் ரூ.23 லட்சத்து 26 ஆயிரத்து 602 உத்தப்பா தரப்பில் பாக்கி உள்ளது.
இதனால் அவரது நிறுவனத்தில் பணியாற்றியவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி வழங்குவதில் சிக்கல் உள்ளது. இதுபற்றி பெங்களூர் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சடாக்சரி கோபால் ரெட்டி உத்தரவிட்டும் உத்தப்பாவின் நிறுவனம் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பணமோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக புலிகேசி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டிசம்பர் 27 ம் தேதிக்குள் ராபின் உத்தப்பா ரூ.23 லட்சத்து 36 ஆயிரத்து 602யை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவர் பெங்களூர் புலிகேசிநகர் போலீசாரால் கைது செய்யப்பட உள்ளார். இது ராபின் உத்தப்பாவின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் தான் கைது வாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று ராபின் உத்தப்பா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விடுமுறை கால நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி சுராஜ் கோவிந்தராஜ் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்தது. அப்போது ராபின் உத்தப்பாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. இதன்மூலம் ராபின் உத்தப்பா போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளார்.
அதாவது நீதிமன்றத்தில் ராபின் உத்தப்பா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛ராபின் உத்தப்பா முறைப்படி 2020ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறிவிட்டார். அதன்பிறகு அவர் அந்த நிறுவனம் சார்ந்த தினசரி நடவடிக்கைகளில் எதிலும் தொடர்புப்படுத்தி கொள்ளவில்லை'' என்று கூறினார். இதனை ஏற்ற நீதிமன்றம் ராபின் உத்தப்பாவுக்கு எதிரான கைது வாரண்ட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications