சட்டசபை ஓவர்.. இப்போ சிறைச்சாலை! சாவர்க்கர் உருவப்படத்தை கட்டாயமாக்கிய கர்நாடக அரசு.. பரபர அறிவிப்பு
பெங்களூர்: கர்நாடக சட்டப் பேரவையில் சமீபத்தில் சாவர்க்கர் படம் திறக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது அம்மாநில சிறைச்சாலை ஒன்றிலும் இவரது உருவப்படம் திறக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆங்கிலேயர்களால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாவர்க்கர் தன்னை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று ஆங்கிலேய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதால் அவரை தேச பக்தராக ஏற்க முடியாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், அவரது முழு உருவப்படம் கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள சுவர்ணசவுதா சட்டப்பேரவை கட்டிடத்தில் ஆளும் பாஜகவினரால் திறந்து வைக்கப்பட்டது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சட்டப்பேரவையின் மையத்தில் அமர்ந்து பாஜக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். இது குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, "மக்களுக்கு இங்கு ஏகப்பட்ட பிரச்னை இருக்கும்போது ஏன் அரசு தற்போது சாவர்க்கர் குறித்து கவலை கொண்டிருக்கிறது?

நேரு
இப்போது இவரின் படத்தை திறக்க வேண்டியதன் அவசியம் என்ன? இவரின் படத்தை இவர்களால் திறக்கமுடியும் எனில் ஏன் நாட்டின் முதல் பிரதமரான நேருவின் படத்தை இவர்களால் திறக்க முடியவில்லை?" என்று கேள்வியெழுப்பி இருந்தார். அதேபோல கடந்த சில நாட்களாகவே கர்நாடக மாநிலத்தில் வலதுசாரி அமைப்புகளின் செயல்பாடுகள் தீவிரமடைந்து வருவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. எந்த அளவுக்கு இது தீவிரமடைந்துள்ளதெனில்? அரசு சார்பில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் இஸ்லாமிய கட்டிட கலையை ஒத்திருப்பதால் அதனை இடித்துவிட்டு இந்து கட்டிடக்கலையில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றும், பச்சை நிறத்தில் அரசு கட்டிடங்களுக்கு வர்ணம் பூசப்பட்டிருந்தால் அதனை உடனடியாக அழித்துவிட வேண்டும் என்றும் கூறுமளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

சிறைச்சாலை
இவ்வாறு இருக்கையில்தான் சாவர்க்கர் படம் திறந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது சட்டப்பேரவையை தொடர்ந்து சிறைச்சாலையிலும் சாவர்க்கர் படத்தை திறக்க பாஜக அரசு முயன்று வருகிறதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. அதாவது, பெல்காமில் உள்ள ஹிண்டலகா சிறையில் சாவர்க்கர் படம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த சிறையில் ஏற்கெனவே இவரது படம் இருந்ததாகவும் ஆனால் சமீபத்தில் இது அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே மீண்டும் இச்சிறைச்சாலையில் இப்படத்தை கொண்டு வர வலதுசாரி அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அமைச்சர்கள்
இதனையடுத்து தற்போது சிறைச்சாலையினுள் படம் திறக்கப்பட்டுள்ளது. படத்தை உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவுடன் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷும் திறந்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் சிறைச்சாலைக்குள் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த சிறைச்சாலைக்குள் சாவர்க்கர் 100 நாட்கள் அடைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான் டெல்லிக்கு வந்திருந்தார். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதற்காக 1950ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.

பாஜக
இதனையடுத்து இவரது மகன் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த நிலையில் 1950 ஆண்டு ஜூலை 13ம் தேதி சிறையிலருந்து விடுதலை செய்யப்பட்டார். இதன் காரணமாகதான் இவரது உருவப்படம் ஏற்கெனவே சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தது. மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து சாவர்க்கரை தொடர்ந்து கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications