சாதாரண பஸ் முதல் ஏசி பஸ் வரை..எல்லா பயணிகளுக்கும் இலவச பயணம்! பெங்களூரில் சுதந்திர தின சூப்பர் ஆஃபர்
பெங்களூரு: நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் சாதாரண பஸ்கள் முதல் குளிர்சாதன பஸ்கள் வரை அனைத்து வித பஸ்களிலும் இன்று ஒருநாள் அனைத்து வித பயணிகளுக்கும் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று வழக்கமான உற்சாகத்தை விட மிக பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் என்பதால் இந்த ஆண்டு சுதந்திர தினம் அமுதப்பெருவிழாவாக கொண்டாடப்பட்டது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு ஒரே நாளில் 8 முறை கொலை மிரட்டல்- ஒருவர் கைது
சுதந்திர தின கொண்டாட்டம்
இதையொட்டி கடந்த 13-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரையில் வீடுகள் தோறும் தேசியக்கொடியை ஏற்றியும், காட்சிப்படுத்தியும், இதை ஒரு இயக்கமாக நடத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதன்படி நாடு முழுவதும் மக்கள் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடினர். பல இடங்களில் வீடுகளில் தேசியக்கொடி பட்டொளி வீசி பறந்ததை காண முடிந்தது. ஆட்டோக்கள் உள்பட வாகனங்களில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது.
பெங்களூருவில் மட்டும் தான்
நாட்டின் முக்கிய இடங்களிலும் மூவர்ணக் கொடியில் மிளிர்ந்தன. இப்படியாக சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், கர்நாடக அரசு ஒரு படி மேலே சென்று சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளது. அதாவது, சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்நாடக அரசு பேருந்து பயணிகளுக்கு இலவச பயணம் சென்ற சிறப்பு சலுகை அளித்து பயணிகளை கவர்ந்தது. மாநிலம் முழுவதும் இலவச பயணம் என்று நினைத்துவிட வேண்டாம்.. தலைநகர் பெங்களூருவில் மட்டுமே இந்த ஆஃபர் பயணிகளுக்கு அளிக்கப்பட்டது.
குளிர்சாதன பேருந்துகளிலும் இலவசம்
பெங்களூருவில் பி.எம்.டி.சி. (அரசு) பஸ்களில் பயணிகள் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் ஏற்கனவே அறிவித்தது. அதன்படி, இன்று பெங்களூருவில் உள்ள சுற்றுலாத்தளங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு பயணிகள் டிக்கெட் இன்றி பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சாதாரண அரசு பேருந்துகள் முதல் குளிர்சாதன பேருந்துகள் என அனைத்து வகை அரசு பேருந்துகளிலும் இன்று அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை டிக்கெட் எதுவும் இன்றி இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்து கழகம் அறிவித்தது.
அலைமோதிய கூட்டம்
இன்று விடுமுறை தினம் என்பதால், சுற்றுலா தளங்களுக்கு செல்லும் மக்கள் இலவசமாக பயணித்தனர். இதனால், பஸ்களில் கூட்டம் அலைமோதியது. சுற்றுலாதளங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த இலவச பயணத்தின் மூலம் பி.எம்.டி.சி. நிர்வாகத்திற்கு ரூ.3 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூரு பயணிகளுக்கு அரசின் இந்த அறிவிப்பு சுதந்திர தின பரிசு போல இருப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். பேருந்துகளில் இலவச பயணத்தை அறிந்திராமல் டிக்கெட் எடுக்க காசு கொடுத்த சிலரும் இலவசம் என்று தெரிந்ததும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மகிழ்ச்சியில் பயணிகள்
இன்று காலை பெங்களூரு நகரில் பயணித்த பெண் பயணி ஒருவர் ,அரசின் இந்த இலவச அறிவிப்பு குறித்து பேசுகையில், 'செய்தித்தாள் வாயிலாக இந்த செய்தியை அறிந்தேன். நான் பெங்களூருவில் பல ஆண்டுகள் வசித்தாலும் ஒருநாளும் விமான நிலையத்தை பார்த்தது இல்லை. அவ்வளவு தூரம் பயணிக்க வேண்டுமா? என நினைத்து செல்லாமலே இருந்தேன். இன்று இலவச பயணம் என்பதை அறிந்ததால், இந்த வாய்ப்பை பயன்படுத்தி விமான நிலையத்தை பார்த்து விட்டு திரும்பி வருகிறேன். தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்த விமானநிலையத்தை நேரில் பார்த்ததும் வியந்து விட்டேன்" என்றார். ரக்ஷா பந்தனை முன்னிட்டு உத்தர பிரதேசத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை என இரண்டு நாட்களுக்கு பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை உத்தரபிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.