நடிகை ரன்யா ராவின் பெங்களூர் வீட்டில் ஏராளமான தங்கம்.. கோடிக்கணக்கில் பணம்.. ஆடிப்போன அதிகாரிகள்
பெங்களூர்: பெங்களூர் விமான நிலையத்தில் 14 கிலோ 800 கிராம் தங்க கட்டிகளை கடத்தி வந்து சிக்கிய நடிகையான ரன்யா ராவ் வீட்டில் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினார்கள். மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியின் வளர்ப்பு மகளாகிய ரன்யா ராவின் பெங்களுர் அடுக்குமாடி குடியிருப்பில் நடத்திய சோதனையில் 4.75 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணம் சிக்கியுள்ளது. ஒட்டு மொத்தமாக ரூ.17.29 கோடிக்கு நகைகள், பணம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த 32 வயது நடிகை ரன்யா ராவ், கன்னடத்தில் மானிக்யா, பட்டாக்கி ஆகிய 2 படங்களில் நடித்துள்ளார். இதேபோல நடிகர் விக்ரம் பிரபுவுடன் வாகா என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். இவர் ஐ.பி.எஸ். அதிகாரி ராமசந்திரா ராவ் என்பவரின் வளர்ப்பு மகள் ஆவார். ஐபிஎஸ் அதிகாரியான ராமசந்திரா ராவ் கடந்த 2013-ம் ஆண்டு முதல் கர்நாடக போலீஸ் வீட்டுவசதித்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வருகிறார்.

ரன்யா ராவ் அண்மை காலமாக அடிக்கடி துபாய்க்கு சென்று வந்தார். அவர் போலீஸ் அதிகாரியின் மகள் என்பதால் ஆரம்பத்தில் அவரை விமான நிலைய அதிகாரிகள், சுங்கவரித்துறையினர் பெரிய அளவில் சோதனை நடத்தவில்லை. இந்த நிலையில் ரன்யா ராவ் துபாய்க்கு அடிக்கடி போய் வந்ததால், டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. ஏனெனில் வெறும் 15 நாட்களில் மட்டும் அவர் 4 முறை துபாய் சென்று வந்துள்ளார். அவ்வாறு அவர் திரும்பி வரும்போது அதிகளவில் தங்க நகைகளை அணிந்து வந்திருந்தார். இதனால் நடிகை ரன்யா ராவை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு ரகசியமாக கண்காணிக்க தொடங்கினர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாள் முன்பு இரவு துபாயில் இருந்து பெங்களூருவுக்கு அவர் விமானத்தில் புறப்படுகிறார் என்பதை அறிந்த டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், டெல்லியில் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்து 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர்.
சரியாக இரவு 7.30 மணிக்கு ரன்யா ராவ் வந்த விமானம் பெங்களூர் தேவனஹள்ளி விமான நிலையத்தில் தரையிறங்கிய உடன், அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த நடிகை ரன்யா ராவை விமான நிலைய போலீசார் உதவியுடன் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மடக்கிப்பிடித்து அவரது உடமைகளை சோதனை நடத்தினார்கள். அதில் துணிமணிகளுக்கு இடையே தங்க கட்டிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த தங்க கட்டிகள் மற்றும் அவர் அணிந்து வந்திருந்த தங்க நகைகளுக்கு உரிய ஆவணங்கள் பற்றி அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் இல்லை அவரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மொத்த மதிப்பு ரூ.12 கோடி இருக்கும் என அதிகாரிகள் கூறினார்கள்.
இதையடுத்து அதிகாரிகள் அவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக அவரை எச்.பி.ஆர். லே-அவுட்டில் உள்ள வருவாய் நுண்ணறிவு துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே கைதான நடிகை ரன்யா ராவை விசாரணைக்கு பிறகு அதிகாரிகள் பெங்களூர் சிறப்பு பொருளாதார குற்றவியல் கோர்ட்டு நீதிபதி விஸ்வநாத் சன்னபசப்பா கவுடரு வீட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி, தங்கம் கடத்தல் வழக்கில் கைதான ரன்யா ராவுக்கு வருகிற 18-ந்தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், நடிகை ரன்யா ராவிடம் தங்கம் கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது, ரன்யா ராவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் கட்டிட இன்ஜினியர் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு கணவருடன் பெங்களூர் லாவல்லி ரோட்டில் உள்ள அடுக்குமாடி வீட்டில் அவர் குடியேறி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பெங்களூர் லாவல்லி ரோட்டில் உள்ள, அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டிலும் அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினா். அங்கு கட்டுக்கட்டாக பணம், தங்க நகைகள் இருப்பதை கண்டு அதிகாரிகள் ஆடிப்போனார்கள்..
நடிகை ரன்யா ராவ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, 2 கிலோவுக்கும் மேல் விதவிதமான தங்க நகைகள் மற்றும் ரூ.2 கோடியே 67 லட்சம் ரொக்கம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவற்றையும் டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் நகைகள் மற்றும் பணத்தை 4 பெட்டிகளில் வைத்து ரன்யா ராவ் வீட்டில் இருந்து அதிகாரிகள் எடுத்து சென்றார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி வருவாய் நுண்ணறிவு அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், துபாயில் இருந்து நடிகை ரன்யா ராவ் கடத்தி வந்த தங்க கட்டிகள், நகைகளின் மதிப்பு ரூ.12 கோடியே 56 லட்சம் ஆகும். அவரது வீட்டில் சிக்கிய நகைகள், பணத்தின் மதிப்பு ரூ.4 கோடியே 73 லட்சம் ஆகும். ஒட்டு மொத்தமாக ரூ.17.29 கோடிக்கு நகைகள், பணம் மீட்கப்பட்டு உள்ளது என்று கூறினார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications