பெங்களூரில் கொட்டித்தீர்த்த கனமழை. சாலையில் பொங்கி வழியும் வெள்ளநீர்.. வாகன ஓட்டிகள் கடும் அவதி!
பெங்களூர்: கர்நாடகத்தில் ராமநகர் உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் பெங்களூரிலும் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தை தாண்டியும் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூர் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை காலத்தில் மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக குடகு, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, சிவமொக்கா, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான ஏரி, குளங்கள், அணைகள் நிரம்பி உள்ளன.

ராமநகரில் வெள்ளம்
இதற்கிடையே கடந்த சில நாட்களாக ராமநகர், சாம்ராஜ்நகர், மைசூரு, மண்டியா, துமகூரு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றன. ராமநகர் மாவட்டத்தின் பல்வேறு ஏரிகள் மழை வெள்ளத்தால் உடைந்துள்ளன. இதனால் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கார்கள் நீரில் மூழ்கிய நிலையில் கால்நடைகள் வெள்ள நீரில் சிக்கின. பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மழை வெள்ளம் இடுப்பு அளவுக்கு தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பெங்களூரில் வெள்ளம்
இதேபோல் பெங்களூர் நகரிலும் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முழுவதும் நகரில் பல இடங்களில் கனமழை பெய்தது. அதேபோல் இரவிலும் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையின் காரணமாக பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டன.

வாகன ஓட்டிகள் சிரமம்
இந்நிலையில் இன்றும் பெங்களூரில் சில இடங்களில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் நிரம்பி காணப்படுகிறது. குறிப்பாக மாரத்தஹள்ளி-சர்ஜாபுரா அவுட்டர் ரிங் ரோட்டில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். மேலும் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இது வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளன.

மஞ்சள் எச்சரிக்கை
இருப்பினும் பெங்களூர், பெலகாவி உள்ளிட்ட கர்நாடகத்தின் பல்வேற பகுதிகளக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் பசவராஜ் பொம்மை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மழை வெள்ள சேதத்தை கணக்கிடும்படி வருவாய்த்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் மாத சாதனை
இதற்கிடையே தான் பெங்களூரில் தற்போது 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் அதிக மழை பெய்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது பெங்களூரில் 2017 ல் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 351 மில்லிமீட்டர் மழை பெய்து சாதனை படைத்தது. அதன்பிறகு ஆகஸ்ட் மாதத்தில் அந்த அளவுக்கு மழை பெய்யவில்லை. அதாவது 2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் வந்த ஆகஸ்ட் மாதங்களில் பெங்களூரில் பெய்த மழையின் அளவு 200 மில்லிமீட்டரை கூட தொடாத நிலையில் தான் தற்போது 2022 ஆகஸ்ட்டில் 239 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications