ஆடையின்றி வீடியோ கால்.. வசமாய் சிக்கிய பெண் உள்பட 3 பேர்.. கர்நாடக மடாதிபதி தற்கொலையில் ஷாக் தகவல்
பெங்களூர்: கர்நாடகா காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். விசாரணையில் ஹனிடிராப் கும்பல் மிரட்டலால் தான் தற்கொலை செய்தது தெரியவந்தது. வீடியோ காலில் அவரிடம் ஆபாசமாக பேசி ரெக்கார்ட் செய்து வெளியிடுவதாக மிரட்டிய நிலையில் பெண் உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்த பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் 400 ஆண்டு பழமையான காஞ்சுக்கல் மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் பசவலிங்க சுவாமி. இவருக்கு வயது 45.
இவர் லிங்காயத் சமுதாய மடமான இங்கு 1997 முதல் பசவலிங்க சுவாமி மடாதிபதியாக இருந்து வருகிறார். சமீபத்தில் சில்வர் ஜூபிளி விழா கொண்டாடினார்.
அடக்கொடுமையே.. டீ வேண்டாம் என்ற கலெக்டர்.. மகாராஷ்டிரா அமைச்சர் கேட்ட கேள்வி.. வெடித்த சர்ச்சை
மடாதிபதி தூக்கிட்டு தற்கொலை
இந்நிலையில் தான் கடந்த 24ம் தேதி மடாதிபதி பசவலிங்க சுவாமி பூஜை அறையில் இருந்து வெளியே வரவில்லை. மடத்தில் இருந்தவர்கள் கதவை தட்டினர். கதவு திறக்கப்படவில்லை. போன் செய்தாலும் அதனை அவர் எடுக்கவில்லை. ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது ஜன்னல் கிரீல் கம்பியில் தூக்குப்போட்டு பசவலிங்க சுவாமி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
சிக்கிய 2 பக்க கடிதம்
மேலும் மடாதிபதி பசவலிங்கசுவாமி எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. 2 பக்கம் கொண்ட கடித்ததில் பரபரப்பான குற்றச்சாட்டுக்கள் இருந்தன. காஞ்சுக்கல் பாண்டே மடத்தின் மடாதிபதி பொறுப்பில் இருந்து சிலர் என்னை விலக்க நினைக்கிறார். இதற்காக எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகளை பரப்ப நினைக்கின்றனர். இதுதொடர்பாக என்னை மிரட்டினர். இந்த மிரட்டலால் தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருந்தார்.
தற்கொலைக்கான காரணம் என்ன?
இதுபற்றி விசாரணை நடத்தியபோது பெண் ஒருவர் மடாதிபதியுடன் நெருக்கமாக பழகியுள்ளார். இருவரும் செல்போனில் அடிக்கடி பேசியுள்ளனர். மேலும் வீடியோ கால் மூலமாகவும் பேசியுள்ளனர். மடாதிபதி-பெண் இருவரும் ஆடைகள் இன்றி வீடியோகாலில் பேசியுள்ளனர். இதனை வைத்து அந்த பெண் உள்பட மேலும் சிலர் மிரட்டியதால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனால் வேறு வழியின்றி மடாதிபதி தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பெண் உள்பட 3 பேர் கைது
இந்நிலையில் மடாதிபதி பசவலிங்க சுவாமியின் தற்கொலைக்கு காரணம் எனக்கூறி பெங்களூரை சேர்ந்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட பெண் தான் முக்கிய குற்றவாளியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இவர் தான் மடாதிபதியிடம் ஆபாசமாக பேசி வீடியோ பதிவு செய்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரகசியம் காக்கும் போலீஸ்
இருப்பினும் தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணுக்கும், வழக்குக்கும் என்ன தொடர்பு? உள்ளது என்பது பற்றி போலீசார் கூற மறுத்துவிட்டனர். இந்த விவகாரத்தில் மடத்தில் உள்ளவர்கள் உள்பட பின்னணியில் வேறு சிலர் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் கைதானவர்களிடன் பெயர், விபரங்களை போலீசார் வெளியிடாமல் ரகசியம் காக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.