கொரோனா அலை.. தினம் தினம் புது உச்சம் தொடும் பெங்களூர்.. ஹோட்டல்களுடன் ஒப்பந்தம் போட்ட மருத்துவமனைகள்
பெங்களூர்: நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களையும் போலவே, பெங்களூரிலும் கடந்த சில நாட்களாக கோவிட் -19 கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. மும்பை மற்றும் டெல்லியை தாண்டவில்லை என்றபோதிலும் தென் இந்தியாவில் அதிகப்படியாக தினசரி கேஸ்களை பதிவு செய்யும் நகரமாக மாறியுள்ளது பெங்களூர்.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் குறைவாக இருப்பதால், பல ஹோட்டல்கள் தங்கள் அறைகளை, கோவிட் பராமரிப்பு மையங்களாக மாற்ற முன்வந்துள்ளன.
புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (பிபிஎம்பி) மற்றும் கர்நாடக சுகாதாரத் துறை ஆகியவை நகரிலுள்ள ஹோட்டல் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி புரிந்துணர்வை எட்டியுள்ளன.
பெங்களூரில் அதிகம்
கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 14,859 புதிய கோவிட் -19 கேஸ்கள் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதார புல்லட்டின் தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கோவிட் எண்ணிக்கை 11,24,509 ஐ எட்டியுள்ளது. இந்த கேஸ்களில் 60% அல்லது அதற்கு மேற்பட்டவை பெங்களூரில் பதிவாகியுள்ளன.
தடுப்பூசி அவசியம்
பெங்களூரில் உள்ள லைஃப்கேர் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் பேராசிரியர் எல். சீனிவாஸ் மூர்த்தி கூறுகையில், கோவிட் வைரஸைக் குறைக்க குறைந்தது 30 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். நோய்த்தொற்று விரைவாக பரவுவதற்கு மருத்துவ காரணங்களும் சமூக காரணங்களும் உள்ளன. தற்போதுள்ள நிலைமைக்கு, குடிமை அமைப்பு அல்லது மக்களைக் குறை கூறுவது எளிதானது என்றாலும், பரவலைக் கட்டுப்படுத்த இருதரப்பும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
அறிகுறி இல்லை
கடந்த ஆண்டு ஒவ்வொரு நோயாளியும் 2 நபர்களுக்கு தொற்றுநோயை பரப்புவதைக் காண முடிந்தது. இந்த முறை அந்த எண்ணிக்கை 3-5 ஆக அதிகரித்துள்ளது. அதில் பலருக்கு அறிகுறி இல்லை என்பது அச்சமளிக்கிறது.
பெங்களூர் ஹோட்டல்கள்
கடந்த ஆண்டு, முதல் அலையின் போது, பெங்களூரில் சுமார் 18 ஹோட்டல்கள் கோவிட் பராமரிப்பு மையங்களாக இருந்தன. தற்போதைய நிலவரப்படி, நகரத்தில் உள்ள 3 ஹோட்டல்கள் கோவிட் பராமரிப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. பெங்களூரில் தலா 50 க்கும் மேற்பட்ட படுக்கைகளைக் கொண்ட 1,000 க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. அத்தகைய ஹோட்டல்கள் மட்டுமே கோவிட் மையங்களாக மாற்றப்படுவதற்கு பொருத்தமானவை. தேவை என்றால் அவற்றை சேர்த்துக்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மருத்துவமனைகள் ஒப்பந்தம்
பெரிய மருத்துவமனைகளுக்கு அருகிலுள்ள ஹோட்டல்கள் கோவிட் பராமரிப்பு மையங்களாக செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. ராஜாஜி நகரில் உள்ள சுகுனா மருத்துவமனை, சேஷாத்ரிபுரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை மற்றும் மணிப்பால் மருத்துவமனை தலா ஒரு ஹோட்டலுடன் இவ்வாறு ஒப்பந்தம் செய்துள்ளன என்று புருஹத் பெங்களூரு ஹோட்டல் சங்கத்தின் தலைவர் பி.சி.ராவ் தெரிவித்தார்.
வீட்டு சிகிச்சை
ஹோட்டல் உரிமையாளர்களுடன் நடைபெற்ற அனைத்து கூட்டங்களிலும், சுகாதாரத் துறையும் பிபிஎம்பியும் இந்த முறை கோவிட் மையங்களில் நோயாளிகள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும் என கணித்துள்ளனவாம். ஏனென்றால் 2வது அலையின்போது, அறிகுறியற்ற நோயாளிகள்தான் அதிகம் பேர் உள்ளனர். அறிகுறியற்ற பெரும்பாலான நோயாளிகள் வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுகிறார்கள். வீட்டில் தனி அறை மற்றும் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் மட்டுமே மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுகிறார்கள். மருத்துவமனைகளில் படுக்கை நிரம்பினால் மட்டுமே நோயாளிகள் ஹோட்டல்களுக்கு மாற்றப்படுகிறார்கள்.
பணம் சம்பாதிப்பு
ஹோட்டல்களில் அறிகுறியற்ற மற்றும் லேசான அறிகுறிகளுடன் நோயாளிகள் இருப்பார்கள். அவசரகால சூழ்நிலைகளுக்கு ஆக்ஸிஜன் வசதிகள் தயாராக இருக்கும். நோயாளியின் நிலை மோசமடைந்தால், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள். கோவிட் சூழ்நிலை காரணமாக ஹோட்டல்கள் காலியாகத்தான் இயங்குகின்றன. எனவே, அவற்றை, கோவிட் பராமரிப்பு மையங்களாக மாற்றுவதன் மூலம், ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பணம் கிடைக்கிறது.