காங்கிரஸ் கட்சியிலிருந்து.. 8 கோடியுடன் ஓட்டமா.. நடிகை ரம்யா பரபரப்பு விளக்கம்
பெங்களூர்: காங்கிஸ் கட்சியில் இருந்து ரூ.8 கோடி பணத்துடன் ஓடிவிட்டதாக நடிகையும், முன்னாள் எம்பியுமான ‛குத்து' ரம்யா குறித்து செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு ரம்யா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர் ரம்யா. கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்த இவர் பெங்களூரில் வசித்தார்.
ரம்யா காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். கர்நாடகத்தில் தேர்தல் அரசியலிலும் கால்பதித்தார். இதில் வாகையும் சூடினார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? கேஎஸ் அழகிரி சூசகம்.. அப்போ ஜோதிமணியா?
நடிகை டூ எம்பி
அதாவது 2013ம் ஆண்டில் மாண்டியா மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரம்யா வெற்றி பெற்று எம்பியானார். ஒரு ஆண்டு மட்டும் எம்பியாக இருந்த நிலையில் அதன்பிறகு 2014ல் நடந்த மக்களவை பொதுத்தேர்தல் நடந்தது. இதிலும் மாண்டியா தொகுதியில் அவர் களமிறங்கினார். ஆனால் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த புட்டராஜூவிடம் இவர் தோல்வியடைந்தார்.
சமூக வலைதள பிரிவு தலைவி
இந்த தோல்விக்கு கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் தான் காரணம் என அவர் கருதினார். இதையடுத்து அவர் மண்டியா வீட்டை காலி செய்து டெல்லியில் குடியேறினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதில் சில ஆண்டுகள் செயல்பட்ட நிலையில் அவர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
ரூ.8 கோடியுடன் விலகல்
இதையடுத்து காங்கிரஸ் கட்சி மற்றும் தீவிர அரசியலில் இருந்து ரம்யா விலகி உள்ளார். இந்நிலையில் ரம்யா ரூ.8 கோடி எடுத்து கொண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருப்பதாக கர்நாடகத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஆக்ரோஷமாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
போலி என விளக்கம்
நான் ராஜினாமா செய்த பிறகு ரூ.8 கோடியை ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டதாக செய்திகள் போலியாக பரப்பப்டுகின்றன. என் மீதான நம்பிக்கையை குறைக்கும் நோக்கத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன. நான் எங்கேயும் ஓடிப்போகவில்லை. நான் தனிப்பட்ட காரணங்களுக்காக தான் கட்சி பொறுப்பை ராஜினாமா செய்தேன். ரூ.8 கோடிக்காக நான் ஒருபோதும் கட்சியை ஏமாற்றவில்லை.
விளக்கம் அளியுங்கள்
இதில் எனது தவறு என்பது அமைதியாக இருந்தது மட்டுமே. வேணுகோபால்(காங்கிரஸ் பொதுச்செயலாளர்) ஒரு பணிவான வேண்டுகோள். இனி கர்நாடகம் செல்லும்போது இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். எனக்காக இதை நீங்கள் செய்தால் வாழ்நாள் முழுவதும் இந்த அவச்சொல்லை நான் தாங்கி இருக்க வேண்டியது அவசியம் இருக்காது. இதற்கிடையே தன்னை பற்றி காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில தலைவர் டிகே சிவக்குமார் தான் அவதூறு பரப்புவதாக ரம்யா குற்றம்சாட்டியுள்ளதோடு, என்மீதான இத்தகைய குற்றச்சாட்டை யாரும் நம்ப வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.