சாவர்க்கர் படத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. ஈத்கா மைதான சர்ச்சை.. பரபரத்த கர்நாடகம்
பெங்களூர்: பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே இன்று கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது சாவர்க்கர் படத்துடன் கொண்டாடப்பட்டது. இதுதொடர்பான வீடியோ, படங்கள் வெளியாகி விவாதத்துக்கு உள்ளாகி உள்ளன.
சாவர்க்கர் சுதந்திர போராட்ட தியாகி என பாஜக கூறி வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் தற்போது சாவர்க்கர் யார்? என்பது தொடர்பான விவாதம் நடந்து வருகிறது.
இந்த விவாதத்தில் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் பலமுறை மன்னிப்பு கோரிய நபர். வரலாற்றை பாஜக திரித்து கூறி அவரை கொண்டாட பாஜக முயற்சிக்கிறது என எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர்.

கர்நாடக பாடத்தில் சாவர்க்கர்
இதற்கிடையே தான் கர்நாடகத்தில் 8ம் வகுப்பு பாடத்தில் சாவர்க்கர் தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதில், சாவர்க்கர் அந்தமான் சிறையில் ஜன்னல் உள்பட சிறு துளை கூட இல்லாத அறையில் இருந்து புல்புல் பறவை மூலம் பறந்து வந்து நாட்டை பார்த்து சென்றதாக வாக்கியம் இடம்பெற்றுள்ளது. இது தற்போது விவாதமாகி உள்ளது. இது சாத்தியமே கிடையாது எனவும், மாணவர்களுக்கு உண்மைக்கு புறம்பான விஷயத்தை பாடமாக வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுவதோடு, இதனை நீக்க வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் பாஜக தரப்பில், இது ஒரு உவமைக்காக தான் எழுதப்பட்டுள்ளது. தாய்நாட்டு மீதான சாவர்க்கரின் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாவர்க்கர் படத்துடன் விழா
இந்நிலையில் தான் விநாயகர் சதுர்த்தியையொட்டி பெங்களூர் உள்பட பல்வேறு இடங்களில் ஹிந்து அமைப்புகள் பிரமாண்டமான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த விநாயகர் சிலைகளின் முன்பு சாவர்க்கரின் படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடர்பான பேனரில் சாவர்க்கரின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. சில இடங்களில் சாவர்க்கர் தொடர்பான புத்தகங்கள் வழங்கப்பட்டன.

பேனர் அகற்றியதால் சர்ச்சை
குறிப்பாக இன்று பெலகாவி, தார்வார், பெங்களூர் உள்பட பல இடங்களில் விநாயகர் சிலைகளின் அருகே சாவர்க்கர் போட்டோ வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் மற்றும் துமகூருவில் சாவர்க்கர் படத்துடன் வைக்கப்பட்ட கட்அவுட்டுகள் அகற்றப்பட்டன. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஈத்கா மைதான சர்ச்சை
மேலும் பெரும் போராட்டத்துக்கு பிறகு தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இருப்பினும் பெங்களூர் சாம்ராஜ் பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அங்கு பதற்றம் நிலவிய நிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் இந்த ஆண்டு கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை பரபரப்பான சூழலில் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications