அய்யோ போச்சே.. குடும்பத்தோடு கதறி அழுத கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை..வைரலாகும் வீடியோ!
பெங்களூர்: கர்நாடக முதல்வராக சமீபத்தில் பதவியேற்ற பசவராஜ் பொம்மை தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டு வளாகத்தில் கதறி அழும் ஒரு வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். வயது மூப்பு காரணமாக எடியூரப்பா பதவியை விட்டு விலக பாஜக மேலிடம் வற்புறுத்தியதன் காரணமாக அவரும் விட்டு தர முன்வந்தார்.
பிரதமர் படைத்துள்ள மற்றொரு சாதனை.. உலகளவில் மோடி தான் டாப்.. 7 கோடியை தாண்டிய ட்விட்டர் ஃபாலோயர்ஸ்
இதன் பிறகு பாஜக சட்டசபை குழு கூடி புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் பசவராஜ் பொம்மை. எடியூரப்பா அரசில், உள்துறை , சட்டம் போன்ற முக்கியத் துறைகளை தன்வசம் வைத்திருந்த சீனியர் அமைச்சராக இருந்த அவர் ஒரு மனதாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமைச்சரவை பதவியேற்பு எப்போது
இதையடுத்து கடந்த 28ம் தேதி ராஜ் பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வராக பதவியேற்றார் பசவராஜ் பொம்மை. அமைச்சரவை இன்னும் பதவியேற்கவில்லை. அது தொடர்பாக நீண்ட ஆலோசனையில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 3 துணை முதல்வர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
அரசியல் பாரம்பரிய குடும்பம்
2008ம் ஆண்டு தான் பாஜகவில் சேர்ந்தார் பசவராஜ் பொம்மை. அவரை கட்சிக்கு அழைத்து வந்ததில் எடியூரப்பாவுக்கு அப்போது முக்கிய பங்கு இருந்தது. 1988 முதல் 1989 வரை ஓராண்டு காலம் கர்நாடகாவில் முதல்வராக இருந்தவரான எஸ்.ஆர்.பொம்மை என்பவரின் மகன்தான் பசவராஜ் பொம்மை. எனவே குடும்பமே அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பம். எஸ்ஆர் பொம்மை ஆட்சி குடியரசுத் தலைவரால் கலைக்கப்பட்ட தால் அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கில் மாநில அரசுகளை கலைப்பதற்கு மத்திய அரசுக்கு பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது உச்ச நீதிமன்றம். இதுவரை அந்த வழக்கு தான் எந்த ஒரு மாநில ஆட்சி கலைப்பின் போதும் நீதிமன்றங்களில் அளவுகோலாக பின்பற்றப்படுகிறது.
ஆவேச பேச்சாளர்
சட்டசபையிலும் பசவராஜ் பொம்மை செயல்பாடுகள் சிறப்பானதாக இருந்தது. எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நெருங்கி பழகுவார் என்றபோதிலும் சட்ட சபையில் பேசும்போது ஆவேசமாக காணப்படுவார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு வளைந்து கொடுக்க மாட்டார். அரசு தரப்பிலிருந்து உரிய பதிலடி கொடுப்பார். ஒரு பக்கம் நட்பு, இன்னொரு பக்கம் தனது கட்சிக்கான கடமை என இரண்டு விஷயங்களிலும் அவர் மிகவும் நேர்த்தியாக செயல்பட்டார். இதையெல்லாம் பாஜக மேலிடம் கவனித்தால்தான், எடியூரப்பா சிபாரிசின் பேரில் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மையை தேர்ந்தெடுத்தது.
உள்துறை அமைச்சர்
காவல்துறையை தன்வசம் வைத்திருக்கக்கூடிய அமைச்சகம் உள்துறை அமைச்சகம். இதன் அமைச்சராக இருந்தவர் பசவராஜ் பொம்மை. மாநில அரசின் உளவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை இவர் கண்காணித்து வந்தார். சட்டம் ஒழுங்கையும் சிறப்பாக நிலைநாட்டினார். இப்படியெல்லாம் நீண்ட குடும்ப அரசியல் பாரம்பரியம் கொண்டவரும், நிர்வாகத்திறமை கொண்டவருமான பசவராஜ் பொம்மை, மனதளவில் ஒரு குழந்தை போல இளகிய மனம் கொண்டவர்.
|
பசவராஜ் பொம்மை வீட்டில் வளர்த்த நாய்
இதற்கு சான்றாகத்தான் இந்த வீடியோ தற்போது வைரலாக சுற்றிவருகிறது. பசவராஜ் பொம்மை வீட்டில் செல்லமாக ஒரு நாய் வளர்த்தார். சில மாதங்களுக்கு முன்பு அது இறந்து விட்டது. இதையடுத்து நாய்க்கு மாலை போட்டு உரிய மரியாதைகள் செய்து அதை அடக்கம் செய்வதற்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்க பசவராஜ் பொம்மை ஏற்பாடு செய்திருந்தார். வீட்டு வளாகத்தில் நாய் உடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த நாயைப் பார்த்து மனது வெடித்துப் போய் பசவராஜ் பொம்மை குமுறி குமுறி அழுதுள்ளார். கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கைக்குட்டையை வைத்து கண்ணீரை துடைத்தார். இன்னும் ஒருபடி மேலே போய் அப்படியே கீழே அமரும் பசவராஜ் பொம்மை, இறந்து கிடந்த நாயின் உடலை அழுத்தி முத்தமிடுகிறார். இந்த காட்சியை அப்போது யாரோ செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்கள். இது பார்ப்பவர்களை கலங்க வைப்பதாக இருக்கிறது .
குடும்பமே குமுறி குமுறி அழுகை
பசவராஜ் பொம்மையை தொடர்ந்து அவரது மகளும், மனைவியும் நாயின் உடலை பார்த்து அழுகிறார்கள். அதேபோல பசவராஜ் பொம்மை மகள், அந்த நாய்க்கு முத்தமிடுகிறார் . அதன்பிறகு நாயை அடக்கம் செய்ய அனுப்பி வைக்கிறார்கள். ஒட்டுமொத்த குடும்பமும் ஒரு நாய் இறந்ததற்காக குமுறி குமுறி அழுது உள்ள இந்த வீடியோ காட்சி பசவராஜ் பொம்மை முதல்வரான பிறகு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது . ஒரு நாய் மீது இரக்கம் காட்டும், கண்ணீரை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இளகிய மனசு கொண்ட பசவராஜ் பொம்மை, மக்கள் மீது எந்த அளவிற்கு அக்கறையாக இருப்பார் என்று சிலாகிக்கிறார்கள் இதைப் பார்த்த பாஜகவினர்.
ஜெயலலிதாவும் பசவராஜ் பொம்மை மாதிரிதான்
பசவராஜ் பொம்மை மட்டும் கிடையாது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் நிறைய நாய் வளர்த்து வந்தார் . அதில் ஜூலி என்ற ஒரு பெண் நாய் திடீரென உயிரிழந்த போது ஹைதராபாத்திலிருந்து ஜெயலலிதா சென்னை திரும்பி அந்த நாய்க்கு இறுதி சடங்குகளை மேற்கொண்டார் . ஹைதராபாத் நகரிலிருந்து அத்வானியை சந்திப்பதற்காக டெல்லி செல்வதாக இருந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு அவர் சென்னை திரும்பினார். இரும்பு மனுஷியாக அறியப்பட்ட ஜெயலலிதாவும் செல்லப்பிராணி விஷயத்தில் மிகவும் இளகிய மனம் கொண்டவராக இருந்தார். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கதறி அழும் இந்த வீடியோவை பார்க்கும்போது, என்னதான் உயர் பதவிகளில் இருந்தாலும், அது ஜெயலலிதாவாகவே இருந்தாலும் அல்லது, பசவராஜ் பொம்மையாக இருந்தாலும், அவர்களும் தங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது என்கிறார்கள் சமூக வலைத்தளவாசிகள்.