பெரியார் படம் போதும்.. செங்கோல் மரபு கதையெல்லாம் 'அவங்களுக்கு’தான்.. சபாஷ் போட வைத்த சித்தராமையா!
பெங்களூர்: தமிழ்நாட்டை சேர்ந்த சமூக நீதி பேரவையினர் தந்தை பெரியார் படம் மற்றும் தந்தை பெரியார் உருவம் பொறித்த செங்கோல் ஆகியவற்றை சமூக நீதிக்காக போராடும் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு வழங்கினர். ஆனால் தந்தை பெரியார் படத்தை மட்டும் பெற்றுக் கொண்ட சித்தராமையா, செங்கோல் ஒரு சடங்கு, சம்பிரதாயக் குறியீடு என்பதால் அதனைப் பெற மறுத்துள்ளார்.
நாட்டில் செங்கோல் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சோழர்கள் காலத்தில் மன்னர்கள் முடிசூட்டும் போது செங்கோல் ஏந்தி மகுடம் தரித்தனர்; அதன் தொடர்ச்சியாகவே, நாடு விடுதலை அடைந்த போது 1947-ல் தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனம் சென்னையில் ஒரு செங்கோலை தயாரித்தது; அந்த செங்கோல் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் முதலில் கொடுக்கப்பட்டு அதில் புனித நீர் தெளிக்கப்பட்டு பின்னர் ஆட்சி மாற்றக் குறியீடாக பண்டித ஜவஹர்லால் நேருவிடம் கொடுக்கப்பட்டது. இதனைப் பின்பற்றி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது, நேருவிடம் மவுண்ட் பேட்டன் பிரபு கொடுத்ததாக சொல்லப்படும் செங்கோலை தமிழ்நாட்டு ஆதீனங்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார். மேலும் செங்கோலை நெடுஞ்சாண் கிடையாகவும் பிரதமர் மோடி வணங்கினார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசி தெரிவித்த இந்த கருத்துகள் அனைத்தையும் எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் நிராகரித்தன. மவுண்ட் பேட்டன் பிரபு, நேருவிடம் செங்கோல் கொடுத்தார் என்பதற்கு ஆதாரங்களே இல்லை என்பதும் இந்த சர்ச்சையில் உறுதியானது. திருவாவடுதுறை ஆதீனம், தமது சுய விருப்பத்துக்காக நேருவிடம் செங்கோல் கொடுத்ததாக அப்போதைய இந்து நாளிதழில் பணம் கொடுத்து விளம்பரம் செய்ததும் ஆதாரங்களுடன் வெளியாகின.
இந்நிலையில் தமிழ்நாட்டின் மதுரையை மையமாக கொண்டு செயல்படும் சமூக நீதி பேரவை, கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு பெரியார் உருவம் பொறித்த செங்கோல் வழங்க முடிவு செய்தது. சமூக நீதி கோட்பாடுகளை சித்தராமையா செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதைப் பாராட்டி இந்த பெரியார் செங்கோல் வழங்க திட்டமிடப்பட்டது.
இதற்காக பெங்களூரில் நேற்று மதுரை சமூக நீதி பேரவையினர் 30 பேர் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது சமூக நீதிப் பேரவையினர் கொடுத்த பெரியார் உருவம் பொறித்த செங்கோலை ஏற்க மறுத்தார். இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில், செங்கோல் என்பது ஆட்சி மாற்றம் குறித்த ஆன்மீகம் சார்ந்த சடங்கு மரபு. அரசு மரபு தொடர்பான குறியீடு. அது ஜனநாயகத்துக்கு சரியானது அல்ல என்பதால் செங்கோல் சடங்குகளை நாம் எதிர்க்கிறோம். ஆகையால் செங்கோல் நமக்கு தேவை இல்லை என தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் தந்தை பெரியார் படம் உள்ளிட்ட சமூக நீதிப் பேரவையினர் வழங்கியவற்றை சித்தராமையா பெற்றுக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications