கர்நாடகா ஆளுநர் மீது 'கொலைவெறியில்' சித்தராமையா ஆதரவாளர்கள்- நிகழ்ச்சிகள் ரத்து- இசட் பாதுகாப்பு!
பெங்களூர்: மூடா வீட்டு மனைகள் முறைகேடு வழக்கில் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி கொடுத்த விவகாரத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர்களால் ஆளுநர் கெலாட் தாக்கப்படலாம் என உளவுத் துறை எச்சரித்துள்ளதாகவும் இதனால் ஆளுநரின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்தான் மூடா என்பது. இந்த மூடா ஆணையமானது. முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது. இந்த மனைகள் ஒதுக்கீடு சட்டவிரோதமானது என பாஜக மற்றும் சமூக ஆர்வர்லர்கள் ஆளுநர் கெலாட்டிடம் மனு கொடுத்தனர். மேலும் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடரவும் ஆளுநர் அனுமதி கொடுத்தார்.

இந்த அனுமதிக்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க விசாரணை நீதிமன்றத்துக்கு இடைக்கால தடை விதித்தது.
இதனால் முதல்வர் சித்தராமையா பதவி விலக கோரி பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் இணைந்து போராட்டம் நடத்துகின்றன. சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கொடுத்த ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டங்களை நடத்துகிறது.
இந்த நிலையில் கர்நாடகா உள்துறை செயலாளர் உமாசங்கருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், ஆளுநர் கெலாட் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதால் அவருக்கு குண்டு துளைக்காத கார் வழங்க வேண்டும்; இசட் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். ஆகஸ்ட் 29-ந் தேதி வரை ஆளுநரின் நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும். இதனை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆளுநரின் அனைத்து பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆளுநர் கெலாட்டுக்கு குண்டு துளைக்காத கார் மற்றும் இசட் பிளஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. பெங்களூர் விதானசவுதா அருகே ஆளுநர் மாளிகையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications