முடா வழக்கு- சித்தராமையா மனு டிஸ்மிஸ்! ராஜினாமா செய்கிறாரா? கர்நாடகாவில் பதற்றம்!
பெங்களூர்: முடா முறைகேடு வழக்கில் தமக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி கொடுத்ததற்கு எதிரான முதல்வர் சித்தராமையாவின் மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துள்ளது. கர்நாடகா உயர்நீதிமன்றம் தமக்கு எதிராக தீர்ப்பளித்திருக்கும் நிலையில் சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனையடுத்து பெங்களூர், மைசூர் உட்பட முக்கிய நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்நாடகா அரசின் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம்தான் முடா என்பது. இந்த முடா நிறுவனமானது முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகளை சட்டவிரோதமாக வழங்கியது என்பது புகார். ஆனால் மனைவியின் நிலத்தை முடாதான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது; இதற்கு நட்ட ஈடாகவே முடா 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது என்பது சித்தராமையா விளக்கம்.

முடா வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சித்தராமையா மீது வழக்கு தொடர சமூக ஆர்வலர்கள், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் அனுமதி கோரினர். ஆளுநர் கெலாட்டும் அனுமதி கொடுத்ததால் சித்தராமையா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆனால் சித்தராமையா, தமக்கு எதிரான வழக்கு தொடர ஆளுநர் கெலாட் அனுமதி கொடுத்ததற்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், சித்தராமையா மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
சித்தராமையா தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சித்தராமையாவின் மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் கெலாட் அனுமதி அளித்தது செல்லும் என அதிரடி தீர்ப்பளித்தது கர்நாடகா உயர்நீதிமன்றம். இதனையடுத்து சித்தராமையா தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. சித்தராமையா பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் அவருக்கு எதிராக பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் போராட்டம் நடத்தவும் கூடும்.
இதனையடுத்து கர்நாடகாவின் பெங்களூர், மைசூர் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூர் மாநகரின் 8 துணை கமிஷனர்களும் அவரவர் மண்டலங்களிலேயே இருக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார் அத்துடன் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் சட்ட ஒழுங்கை கண்காணிக்கவும் பெங்களூர் மாநகர காவல் ஆணையருடனான வாராந்திர ஆய்வு கூட்டம் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பெங்களூர் மாநகரில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோர் சுதந்திர பூங்காவுக்கு மட்டும் செல்ல வேண்டும் எனவும் மாநகர போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் கர்நாடகாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications