சித்தராமையாவுக்கு எதிராக சதி- அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான விசாரணைக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கர்நாடகாவை அதிரவைத்துக் கொண்டிருக்கும் வால்மீகி வாரிய நிதி முறைகேட்டுக்கு முதல்வர் சித்தராமையாதான் காரணம் என ஒப்புதல் வாக்குமூலம் தர அதிகாரிகளுக்கு நெருக்கடியும் மிரட்டலும் விடுத்ததால் மித்தல், முரளி கண்ணன் ஆகிய இரு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது கர்நாடகா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் வால்மீகி வாரிய அதிகாரிகளில் ஒருவரான சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக சந்திரசேகர் எழுதிய கடிதத்தில் வால்மீகி வாரிய நிதி முறைகேடுகளை விவரித்திருந்தார்.

இதனால் அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்தார். பின்னர் முன்னாள் அமைச்சர் நாகேந்திராவை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
மேலும் வால்மீகி வாரியத்தில் பணியாற்றிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய போது, முதல்வர் சித்தராமையாவை சிக்க வைக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் சதித் திட்டத்தை அரங்கேற்ற முயற்சித்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில்தான் வால்மீகி வாரிய முன்னாள் அதிகாரியும் தற்போது கர்நாடகா சமூக நலத்துறை கூடுதல் இயக்குநராகவும் இருக்கும் கல்லேஷ், ஷேசாத்திரிபுரம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். பின்னர் அந்தப் புகார் வில்சன் கார்டனுக்கு மாற்றப்பட்டது. அமலாக்கத்துறை அதிகாரிகளான மித்தல், முரளி கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குக்கு தடை கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.












Click it and Unblock the Notifications