இந்தி தினம் துக்க நாள்.. இந்தி மொழி திணிப்புக்கு எதிராக கர்நாடகாவில் ஆவேசப் போராட்டம்!
பெங்களூர்: இந்தி மத்திய அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்தி தினத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட துக்க நாளாக கடைபிடிக்கப்பட்டது. மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக கன்னட மொழி பாதுகாப்பு இயக்கத்தினர் நேற்று போராட்டங்களையும் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தி மொழியானது மத்திய அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்தி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், இந்தி அதிகாரப்பூர்வ மொழியாக 75 ஆண்டுகளைக் குறிக்கும் விழாவில் நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் அல்லது வங்காளமாக இருந்தாலும், ஒவ்வொரு மொழியும் இந்தியை வலுப்படுத்துகிறது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தி தினத்தை முன்னிட்டு, நாம் ஒரு உறுதிமொழி ஏற்பாட்டை மேற்கொள்வோம், இந்தி மற்றும் நமது உள்ளூர் மொழிகளை வலுப்படுத்துவோம், அலுவல் மொழித் துறையின் இந்தப் பணிக்கு ஆதரவளிப்போம் என்று நாட்டுமக்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்க விரும்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
ஆனால் இந்தி தினத்துக்கு எதிராகவும் இந்தி மொழித் திணிப்பைக் கண்டித்தும் கர்நாடகாவில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. கன்னட மொழி பாதுகாப்பு இயக்கத்தினர் இந்தப் போராட்டத்தை நடத்தினர். இந்தி தினம் என்பது கறுப்பு தினம்; இந்தி மொழியைத் திணிக்கும் மத்திய பாஜக அரசின் முயற்சியால் கன்னட மொழி பாதிக்கும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் கர்நாடகாவில் இரு மொழிக் கொள்கை மட்டுமே அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் இந்தியில் வர்த்தக நிறுவனங்கள் எழுதி வைத்திருந்த பெயர் பலகைகளையும் கன்னட மொழி பாதுகாப்பு இயக்கத்தினர் தார்பூசி அழித்தனர்.












Click it and Unblock the Notifications