கர்நாடகாவை குலைநடுங்க வைத்த தமிழ்நாட்டு கும்பல்: 60 குழந்தைகள் விற்பனை- 8 தமிழர்கள் கைது!
பெங்களூர்: கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 60 குழந்தைகள் கடத்தி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல் நடமாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பெங்களூர் மாநகரம் முழுவதும் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளின் போது ராஜராஜேஸ்வரி நகர் எனப்படும் ஆர்.ஆர்.நகர் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய 4 பேர் சிக்கினர். தமிழ்நாட்டின் ஈரோடு பகுதியை சேர்ந்த 4 பேரிடம் துருவி துருவி போலீசார் நடத்திய சோதனையில் குழந்தை ஒன்றை விற்பனை செய்ய ஆர்.ஆர்.நகர் பகுதிக்கு வந்தது அம்பலமானது.

இதனையடுத்து இந்த ஈரோடு கும்பலை கைது செய்த பெங்களூர் போலீசார் அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பெங்களூரில் பதுங்கியிருந்த குழந்தை விற்பனை கும்பலைச் சேர்ந்த மேலும் 4 தமிழ்நாட்டு பெண்களும் சிக்கினர். குழந்தைகளை கடத்தி கர்நாடகாவில் விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த தமிழ்நாட்டின் 8 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பெங்களூர் போலீசார் கூறுகையில், குழந்தை இல்லாத தம்பதிகளை முதலில் தெரிந்து கொள்கின்றனர். பின்னர் குழந்தைகளை கடத்தியோ அல்லது வறுமையில் இருப்பவர்களிடம் இருந்து சொற்ப விலைக்கு வாங்கியோ குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்பனை செய்கின்றனர். இந்த கும்பலின் கேங் லீடராக செயல்பட்டவர் மகாலட்சுமி.
பொதுவாக பிறந்த 20 நாட்களுக்குள் ரூ2 லட்சத்துக்கு குழந்தைகளை வாங்கி அல்லது கடத்தி வந்து ரூ10 முதல் ரூ20 லட்சம் வரை விற்பனை செய்துள்ளனர். ஆண் குழந்தைகளுக்கு ரூ10 லட்சம்; பெண் குழந்தைகளுக்கு ரூ5 லட்சம் என பிக்ஸ் செய்திருக்கிறது இந்த கும்பல். இதுவரை சுமார் 60 குழந்தைகளை கடத்தி விற்பனை செய்துள்ளனராம். இந்த கும்பலிடம் கை மாறிய குழந்தைகளின் விவரங்களை சேகரித்து வருகிறோம். இந்த கும்பலுடன் தொடர்புடைய கர்நாடகா மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.












Click it and Unblock the Notifications