நீர் குறைவாக உள்ளது.. காவிரியில் தமிழகத்திற்கு ஜூனில் தண்ணீர் வழங்க இயலாது.. கை விரிக்கும் கர்நாடகா?
பெங்களூர்: கர்நாடக அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை விடுவிக்கும் நிலையில் இல்லை என்று டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசு கூறியுள்ளது.
காவிரி நதி நீரை பங்கிட்டு கொள்வதில் தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே முரண்பாடுகள் உள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டவும் கர்நாடகா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் அது தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

எக்காரணத்தைக் கொண்டும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட விட மாட்டோம் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. காவிரி நதி நீரை பங்கிட்டு கொள்வதில் நீண்ட கால சட்ட போராட்டத்துக்கு பிறகு, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக இந்த ஆணையத்தின் கூட்டம் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில் டெல்லியில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ஜூன் மாதத்திற்கான 9.1 டி.எம்.சி தண்ணீரையும் ஜூலை மாதத்திற்கான 35 டி.எம்.சி தண்ணீரையும் உரிய நேரத்தில் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் ஆனால், காவிரி படுகை நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு குறைவாக உள்ளதாகவும் நீர் வரத்தும் குறைவாக இருப்பதால் பருவமழை பெய்தால் மட்டுமே நீர் திறப்பது குறித்து பரிசிலீக்கப்படும் என்று கர்நாடக அரசு தரப்பில் கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.
மேலும், தமிழகத்தில் மேட்டூர் அணையில் நீர் இருப்பு போதுமான அளவுக்கு உள்ளது. ஜூன் 1 ஆம் தேதி நிலவரப்படி அணையில் 71 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. இதற்கு கர்நாடகா கடந்த ஆண்டு அதிகப்படியான தண்ணீர் திறந்து விட்டதே காரணம். தற்போது இருக்கும் நீர் தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதம் வரை போதுமானதாக இருக்கும் என்று கர்நாடகா கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.
எனினும், ஜூன் மாதம் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் கேட்டுக்கொண்டதாகவும் ஆனாலும் இது தொடர்பாக எழுத்துப்பூர்வ உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டம் குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை.












Click it and Unblock the Notifications