கர்நாடகா ஆபாச சிடி வழக்கு.. போலீஸ் ரெய்டு... ஆதாரங்கள் அழிப்பு.. இளம்பெண் சரமாரி குற்றச்சாட்டு
பெங்களூரு: கர்நாடக ஆபாச சிடி வழக்கு ஒரு தலைப்பட்சமாக நடைபெறுவதாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் பெங்களூரு போலீஸ் ஆணையருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடகாவின் நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ரமேஷ் ஜர்கிஹோலி. இவர் கர்நாடக பாஜகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி தன்னுடன் நெருக்கமாக இருந்துவிட்டு, பின் தன்னை ஏமாற்றிவிட்டதாகப் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
சர்ச்சை வீடியோ
இது தொடர்பான வீடியோ சி.டி.யும், ஆடியோ உரையாடல்களும் வெளியானது. இது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோக்கள் முற்றிலும் போலியானது என்று கூறிய ரமேஷ் ஜர்கிஹோலி, தன் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார். இருப்பினும், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
பெண் கடிதம்
அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த புகாரை தற்போது சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று விசாரித்து வருகிறது. இந்நிலையில், போலீசார் விசாரணை ஒரு தலைப்பட்சமாக நடைபெறுவதாக அந்தப் பெண் பெங்களூரு ஆணையருக்கு மீண்டும் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
ஆதாரங்கள் அழிப்பு
ரமேஷ் ஜர்கிஹோலியிடம் ஒரு முறை மட்டும், அதுவும் மூன்று மணி நேரங்கள் மட்டும் போலீசார் விசாரணை நடத்தியதாகவும் இருப்பினும் தன்னிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார். மேலும், தான் தங்கியிருந்த இடத்தில் சோதனை என்ற பெயரில் போலீசார் அனைத்து ஆதாரங்களையும் அழித்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ்
கர்நாடக அரசின் தலையீடு இருப்பதாலேயே சிறப்பு விசாரணைக் குழு ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்வதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதியின் நேரடி கண்காணிப்பில் இருந்தால் மட்டும் முறையாக விசாரணை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.