'மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி போடக்கூடாது'.. பெண்களை திருப்பி அனுப்பிய தடுப்பூசி மையங்கள்.. சர்ச்சை
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் ஒரு சில தடுப்பூசி மையங்கள் மாதவிடாய் இருக்கும் பெண்களுக்கு தடுப்பூசி போட முடியாது எனக்கூறி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வடக்கு கர்நாடகா மாவட்டங்களில் ஒரு சில தடுப்பூசி மையங்களில் பெண்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக ஆர்வமுடன் சென்றனர்.
அப்போது தடுப்பூசி மையங்களில் இருக்கும் சுகாதார ஊழியர்கள், மாதவிடாய் இருக்கிறதா? என்று அந்த பெண்களிடம் விசாரித்துள்ளனர்.

தடுப்பூசி போட முடியாது
இதனை தொடர்ந்து மாதவிடாய் இருக்கும் பெண்களுக்கு தடுப்பூசி போட முடியாது என அந்த பெண்களை அனுப்பியுள்ளனர். 5 நாட்களுக்கு பிறகு வருமாறும் கூறியுள்ளனர். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்களை திருப்பி அனுப்பினார்கள்
ரைச்சூர், பெலகாவி மற்றும் பிதர் மாவட்டங்களில் உள்ள தடுப்பூசி மையங்களில் இவ்வாறு நடந்துள்ளதாக தெரிகிறது. மாதவிடாய் காலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மயக்கம், அதீத ரத்தப்போக்கு ஏற்படலாம் என்று வெளியான சில தகவல்களின் அடிப்படையில் சுகாதார பணியாளர்கள் அந்த பெண்களை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இது போலியான செய்தி
ஆனால் இந்த காரணம் கூறி எந்த பெண்களும் திருப்பி அனுப்பப்படவில்லை என்று ராய்ச்சூர் துணை கமிஷனர் வெங்கடேஷ் குமார் தெரிவித்துள்ளார். இது ஒரு போலியான செய்தி என்றும் எந்த தடுப்பூசி மையங்களும் இதுபோல் சொல்லவில்லை என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் பத்திரிக்கை தகவல் மையம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'பெண்கள் மாதவிடாய் சுழற்சிக்கு 5 நாட்களுக்கு முன்னும் பின்னும் கோவிட் 19 தடுப்பூசியை எடுக்கக்கூடாது என்று தவறான தகவல் வலம் வருகிறது. வதந்திகளுக்கு ஆளாகாதீர்கள்! 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்' என்று விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசு விளக்கம்
பெண்கள் மாதவிடாய் ஏற்படும் நாட்கள் உட்பட எந்த நாளில் வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று இந்திய மகப்பேறியல் சமூகங்களின் கூட்டமைப்பும் கூறியுள்ளது. மாதவிடாயின்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ள பெண்கள் தயக்கம் காட்டத் தேவையில்லை என்று நிதி ஆயோக்கின் உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் ஏறகனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications