தடுப்பூசியை கண்டாலே கதவை சாத்திய கிராமத்தினர்.. செம பிளானுடன் மடக்கிய அதிகாரிகள் .. எங்க தெரியுமா?
பெங்களுரு: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.பெரும்பாலும் அனைத்து மாநில மக்களும் ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
ஆனால் நாட்டின் ஒரு சில பகுதிகளில் மக்களுக்கு தடுப்பூசிகள் குறித்து புரிதல் இல்லை. மலைகிராமங்கள், குக்கிராமங்களில் தடுப்பூசி பற்றிய தேவையில்லாத பயம் இருப்பதால் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கின்றனர்.

கதவை பூட்டுகின்றனர்
இப்படிப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்குள் அதிகாரிகள் ஒருவழியாகி விடுகின்றனர். இந்த வரிசையில் உள்ள ஒரு கிராமம்தான் காஞ்சகரஹள்ளி. இந்த கிராமம் கர்நாடக மாநிலம் யாத்கீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடுவதற்காக அதிகாரிகள் உள்ளே நுழைந்து விட்டனர் என்பதை அறிந்தாலே கிராம மக்கள் அனைவரும் கதவை பூட்டிக்கொண்டு வீட்டுக்குளேயே இருந்து விடுகின்றனர்.

அதிகாரிகள் வகுத்த திட்டம்
அதிகாரிகள் பலமுறை கதவை தட்டிபார்த்தும் அவர்கள் கதவை திறப்பதில்லை. ஒரு சிலர் வெளியே வந்தாலும் அதிகாரிகளை கண்டபடி திட்டி அனுப்பி விடுவார்கள். தினமும் அதிகாரிகள் காஞ்சகரஹள்ளி கிராமத்துக்கு செல்வதும், ஆனால் ஒரு தடுப்பூசி கூட போடாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருவதும் வாடிக்கையாகி விட்டது. இதனால் அதிகாரிகள் ஒரு புதிய திட்டத்தை வகுத்தனர். அந்த கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின் பதிவு செய்த நபர்களின் விவரங்களை கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து பெற்றனர்.

அனைவருக்கும் தடுப்பூசி
இதனை தொடர்ந்து அந்த நபர்கள் வேலை செய்யும் வயல்வெளிகள், சாலை பகுதிகள் ஆகிய இடங்களுக்கு செல்லும் அதிகாரிகள் அங்கு வைத்து அவர்களுக்கு தடுப்பூசி போடுகின்றனர். இதன் காரணமாக கிராம வாசிகளுக்கு ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இது மட்டுமில்லாது மக்கள் கூடும் இடங்கள், மார்க்கெட் பகுதிகளுக்கு சென்று தடுப்பூசி போடுகின்றனர்.

பைக்கிலும் எடுத்து செல்கிறோம்
இது தொடர்பாக யாத்கீர் மாவட்ட சுகாதார அதிகாரி இந்துமதி கூறியதாவது:- தடுப்பூசி நோய்க்கு வழிவகுக்கும் என்று கிராம மக்களிடையே ஒரு தவறான கருத்து உள்ளது. இதனால் நாங்கள் போகும்போது கதவை சாத்திக் கொள்கின்றனர். இதனால்தான் அவர்கள் வேலை செய்யும், கூடும் இடங்களுக்கே சென்று தடுப்பூசி போட்டு வருகிறோம். கார்கள் போக முடியாத இடத்தில் பைக்கில் எடுத்து சென்றும் தடுப்பூசிகள் போட்டு வருகிறோம். அங்கு சென்று தடுப்பூசியின் நன்மை குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வும் செய்து வருகிறோம் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications