சாப்ட்வேர் என்ஜினீயர்களே உஷார்! அச்சுறுத்தும் சிறுத்தையால் அலறும் பெங்களூர்! பரவும் வீடியோ-பரபரப்பு
பெங்களூர்: பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே இரவில் சிறுத்தை நடமாடியது. இது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள நிலையில் அதன் வீடியோ வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் இன்ஃபோசிஸ், பயோகான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் தான் எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள சிங்கசந்திரா பகுதியையொட்டி பன்னரக்கட்டா உயிரியல் பூங்கா உள்ளது.

இங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. பன்னரக்கட்டா உயிரியல் பூங்காவில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பெங்களூர் புறநகர், ராமநகர் மாவட்டங்களில் நுழைந்து மக்களை அச்சுறுத்துவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
ஆனால் இப்போது சிறுத்தை ஒன்று பெங்களூருவுக்குள் நுழைந்துள்ளது. அதாவது நேற்று இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது. பெங்களூர் ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள எம்எஸ் தோனி இன்டர்நேஷனல் பள்ளி அருகே இரவில் சாலையில் சிறுத்தை ஒன்று சுற்றி வந்ததாக வீடியோ பரவியது. அந்த வீடியோவில் சாலையில் ஹாயாக வலம்வரும் சிறுத்தையை சில தெருநாய்கள் விரட்டி உள்ளன. மேலும் வீட்டு ஒன்றின் முன்புறமும் சிறுத்தை உலாவியது.
இரவு நேரம் என்பதாலும், மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினாலும் யாரும் சிறுத்தையை பார்க்கவில்லை. இருப்பினும் சிறுத்தை நடமாட்டம் என்பது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான நிலையில் அந்த வீடியோ வெளியானது.
இதையடுத்து எம்எஸ் தோனி இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் இ-மெயில் மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதில், ‛‛சிங்கசந்திரா பகுதியில் சிறுத்தை ஒன்று தென்பட்டுள்ளது. தற்போது அது நீண்டதூரம் பயணித்து ஜிபி பாளையா பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது. வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு குழுவினர் விழிப்புடன் செயல்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உங்களின் ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த வீடியோ குறித்து வனத்துறையினர் மற்றும் போலீசாருக்கு விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த சிறுத்தை ஒயிட்பீல்டு பகுதியில் இல்லை என்பதும், அந்த சிறுத்தை நடமாடிய பகுதி என்பது எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள சிங்கசந்திரா என்பதும் தெரியவந்தது. இதனை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
இதுபற்றி தலைமை வன பாதுகாவலர் எஸ்எஸ் லிங்கராஜூ கூறுகையில், ‛‛சிறுத்தை பதுங்கி உள்ள இடத்தை கண்டுபிடிக்க வனத்துறையினர் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பரவும் வீடியோவில் உள்ள இடம் ஒயிட்பீல்ட் இல்லை. அந்த வீடியோவில் இருக்கும் இடம் பன்னரகட்டா அருகே உள்ள சிங்கசந்திராவாகும்'' என்றார்.
தற்போது பெங்களூரில் சிறுத்தை நடமாட்டத்தை கண்டுபிடித்து அதனை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் சிறுத்தை நடமாடிய பகுதியில் வசிக்கும் மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர். இதனால் எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் உள்ள சாப்ட்வேர் என்ஜினீயர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications