பாரபட்சம் பார்க்காத மழை: பெங்களூரில் கோடீஸ்வரர்களுக்கே இந்த நிலைமையா?.. வீடுகளை விட்டு வெளியேறினர்
பெங்களூர்: பெங்களூரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பல கோடீசுவரர்களும் தங்களது கனவு இல்ல வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவுக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்து இருக்க மாட்டர்கள்..
ஏனென்றால் சிலிக்கான் சிட்டி என்று வர்ணிக்கப்படும் பெங்களூருவின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
மஞ்சள் அலர்ட்.. பெங்களூரில் செப்டம்பர் 9 வரை மழை வெளுக்க போகிறது.. அதிகரிக்கும் வெள்ளம்.. நிலை என்ன?
குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம்
இதற்கு கடந்த 4 ஆம் தேதி பெய்த பெருமழையே காரணம். ஒரே நாள் இரவில் கொட்டி தீர்த்த கனமழை பெங்களூருவை வெள்ளக்காடாக்கியது. நகரின் முக்கிய சந்திப்புகளும் பல அடி உயரத்திற்கு வெள்ள நீர் தேங்கி நின்றது. இதனால் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. சர்ஜாப்புரா ரோடு, மகாதேவபுரா, பெல்லந்தூர், எமலூர் பகுதிகளில் ஏரிகள் உடைந்ததால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
சிரமத்தில் மக்கள்
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் மாநகராட்சி அதிகாரிகளும் திணறி வருகின்றனர். பல இடங்களில் வெள்ளம் வடியாமல் தொடர்ந்து 4 நாட்களாக தண்ணீர் தேங்கி கிடப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி போனது. ஏழை, எளிய மக்கள் ஒருபுறம் உணவின்றி சிரமப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் செல்வந்தர்களும் மழை வெள்ளத்தால் கடும் சிரமமடைந்துள்ளனர்.
செல்வந்தர்களின் எண்ணம்
குறிப்பாக பெங்களூரில் செல்வந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான சர்ஜாப்புரா சாலையில் உள்ள வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால், அந்த வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள், பைக்குகள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன. மேலும் அவர்கள் வெளியே செல்வதற்கும், உணவு பொருட்கள் வாங்கவும் ரப்பர் படகுகளில் செல்வதை காணமுடிந்தது. பெங்களூர் புறநகரில் பலகோடி மதிப்புடைய அடுக்குமாடி குடியிருப்புகளும் வெள்ள பாதிப்புக்கு தப்பவில்லை. இதனால் இத்தனை கோடி கொடுத்தும் இந்த நிலைமைதானா... என தலையில் அடித்துக்கொள்ளும் அளவுக்கு செல்வந்தர்களின் எண்ண ஓட்டம் இருந்தது.
உறவினர்கள் வீட்டில் தஞ்சம்
அவர்களின் சொகுசு கார்கள் வெள்ளத்தில் சிக்கியதால் பலர் ரப்பர் படகுகள் மூலமாக வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் அவர்கள் வீடுகளை விட்டுவிட்டு வெளியேறி பெங்களூருவுக்கு வெளியே உள்ள உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும் கனமழை நீடிக்கும்
பெங்களூருவில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். கீழ் தளத்தில் குடியிருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால், மக்கள் மோசமான நாட்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
படிப்படியாக இயல்பு நிலை
எனினும், மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவுட்டர் ரிங் ரோடு உள்பட பல இடங்களில் வெள்ள நீர் வடியத்தொடங்கியுள்ளது. குடிநீர் விநியோகமும் பல இடங்களில் மீண்டும் தொடங்கியுள்ளது. முக்கிய சாலைகளில் தேங்கியிருந்த வெள்ளம் வடிந்தோடியதால் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.