"இன்று அவர்கள் தரும் ஆலோசனைபடி.. நாளை முதல் எனது அரசியல் பயணம்.." எடியூரப்பா சூசகம்
பெங்களூரு: பாஜக தேசிய தலைவர்கள் . இன்று (ஜூலை 25) தரும் ஆலோசனைகள் அடிப்படையில் நாளை முதல் தனது பணியைத் தொடங்கவுள்ளதாகக் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது ராஜினாமா குறித்து சூசகமாகப் பேசியுள்ளார்.
Recommended Video
கர்நாடக அரசியல் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக உள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராகக் கட்சிக்குள்ளே எதிர்ப்புகள் உருவாகி வருகிறது.
மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்
அவருக்கு எதிராக பல்வேறு மூத்த அமைச்சர்களும் கூட போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு சவால்கள்
கடந்த சில வாரங்களுக்கு முன் தான், பிரதமர் நரேந்திர மோடி & உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனையும் நடத்தியிருந்தார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரசு விழா ஒன்றில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசுகையில், "கர்நாடக முதல்வராகப் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு சவால்கள் எதிர்கொண்டு வருகிறேன்.
அரசியல் பயணம்
கடந்த இரண்டு ஆண்டுகளில் சிவமோகா மாவட்டத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்களே அதற்குச் சாட்சி. எனது அரசியல் பயணத்தைத் தொடங்கி வைத்தே சிவமோகா மாவட்டம் தான். இங்கு வசிக்கும் மக்களுக்கு என்னால் முடிந்தவரைத் திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.
கொரோனா பெருந்தொற்று
நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இப்போது வரை பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளேன். முன்னெப்போதும் இல்லாத மோசமான இயற்கை பேரழிவுகள், பல ஆயிரம் உயிர்களைப் பலி கொண்ட கொரோனா தொற்று என பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம். இப்போது மீண்டும் ஒரு வெள்ள பாதிப்பை எதிர்கொள்கிறோம். இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
எடியூரப்பா சூசகம்
கர்நாடக மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் அவர்களின் பொருளாதார நிலையையும் மேம்படுத்த நான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். இத்தனை சவால்களை எதிர்கொள்ள எனக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி" என்றார். முன்னதாக, இன்று (ஜூலை 25) தேசிய தலைவர்கள் எனக்கு என்ன மாதிரியான ஆலோசனைகளை வழங்குகிறார்களோ, அதன் அடிப்படையில் எனது பணியை நாளை முதல் தொடங்கவுள்ளேன் என்று தனது ராஜினாமா குறித்து எடியூரப்பா சூசகமாகப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக அரசு
கர்நாடகாவில் கடந்த 2019இல் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து எடியூரப்பா தலைமையிலான பாஜக அங்கு ஆட்சி அமைத்தது. எடியூரப்பா ஆட்சி அமைந்து, நாளையுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எடியூரப்பா கட்சி பணிகளில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.