₹5 லட்சம் நகைக்கடன் எடுத்தா கைக்கு எவ்வளவு வரும்? தெரியாமலே குறையும் ஆயிரங்கள்! காரணம் இதுதான்!
சென்னை: நகைக்கடன் மற்ற கடன்களை விட எளிதாகக் கிடைக்கக்கூடியது.. நகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற பாதுகாப்பு உணர்வினாலும் இது பலரின் முதன்மை விருப்பமாக உள்ளது. ஆனால், ஒரு வங்கியில் நாம் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கடனாகக் கேட்கும்போது, அந்தத் தொகை அப்படியே முழுமையாக நம் கைக்கு வந்து சேருவதில்லை. குறிப்பாக, 5 லட்சம் ரூபாய் போன்ற பெரிய தொகையைக் கடனாக பெறும்போது, கைக்கு வரும் பணத்தில் சில ஆயிரங்கள் வரை குறைந்து போவது பலருக்கும் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. இதற்கான காரணம் என்ன தெரியுமா
நீங்கள் ஒரு வங்கியில் உதாரணத்துக்கு 5 லட்சம் ரூபாய் நகைக்கடன் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். வங்கியின் நடைமுறை கட்டணம் 0.5 சதவீதம் என்று இருந்தால், உங்கள் கடன் தொகையிலிருந்து அங்கேயே 2,500 ரூபாய் கழிக்கப்படும்.

நகைக்கடன் - கட்டணங்கள்
இது தவிர, நகையின் தரம் மற்றும் மாற்றினைப் பரிசோதிக்கும் மதிப்பீட்டாளருக்கான கட்டணம் அதாவது Appraisal charge சுமார் 500 ரூபாய் வரை பிடிக்கப்படும். இந்த 2 கட்டணங்களுக்கும் சேர்த்து 18 சதவீத ஜிஎஸ்டி வரியாக 540 ரூபாய் கழிக்கப்படும். ஆக மொத்தம், நீங்கள் 5 லட்சம் ரூபாய் கடன் என்று ஆவணங்களில் கையெழுத்திட்டாலும், உங்கள் கைக்கு நிகரத் தொகையாக 4,96,460 ரூபாய் மட்டுமே கிடைக்கும்.
இடத்திற்கு இடம் இந்தத் தொகையில் மாற்றங்கள் இருக்கலாம் என்றாலும், சுமார் 3,500 ரூபாய்க்கு மேல் உங்கள் கைக்கு வராமலேயே கழிக்கப்படுவதுதான் யதார்த்தம்.
வட்டி விகிதம் - 80 பைசா
அதேபோல வட்டி விகிதத்தில் இருக்கும் சூட்சுமத்தையும் மக்கள் கவனிக்க வேண்டும். சில நிறுவனங்கள் மாத வட்டி என்று சொல்லுவார்கள், சில ஆண்டு வட்டி என்று சொல்லுவார்கள்.
மாதத்திற்கு 1% வட்டி என்பது ஆண்டுக்கு 12% ஆக மாறும். ஆனால், சில நிறுவனங்கள் விளம்பரத்திற்காக "வெறும் 80 பைசா வட்டி" என்று கவர்ச்சிகரமாகச் சொல்வார்கள். இது கேட்பதற்கு மிகக் குறைவாகத் தெரிந்தாலும், ஆண்டு அடிப்படையில் கணக்கிடும்போது மற்ற பொதுத்துறை வங்கிகளை விட அதிகமாக இருக்கக்கூடும்.
மேலும், வட்டி கணக்கிடும் முறை 'சிம்பிள் இன்ட்ரஸ்ட்' முறையிலா அல்லது 'கூட்டு வட்டி' முறையிலா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ரிசர்வ் வங்கி விதிமுறை
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, எந்த ஒரு நிதி நிறுவனமும் கடன் வழங்கும் முன்பே அதற்கான அனைத்துக் கட்டணங்களையும் வாடிக்கையாளரிடம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். மறைமுகமாக எந்தக் கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என்பது கடுமையான விதியாகும்.
பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் இத்தகைய கட்டணங்களை மிகவும் குறைவாகவும், வெளிப்படையாகவும் வைத்திருக்கின்றன.
நிதி நிறுவனங்கள்
ஆனால், சில தனியார் நிதி நிறுவனங்களில் அவசரம் கருதி மக்கள் இந்த விதிமுறைகளையும், ஒப்பந்தத்தில் உள்ள சிறிய எழுத்துக்களையும் வாசிப்பதில்லை. குறிப்பாக, கடனைத் தாமதமாகக் கட்டினால் விதிக்கப்படும் அபராதம் மற்றும் முன்கூட்டியே அடைக்க விரும்பினால் விதிக்கப்படும் கட்டணங்கள் குறித்தும் முன்கூட்டியே தெரிந்து வைத்திருப்பது பண இழப்பைத் தவிர்க்க உதவும்.
எனவே, நகை அடமானம் வைக்கும்போது வெறும் வட்டி விகிதத்தை மட்டும் பார்க்காமல், பிராசஸிங் கட்டணம், மதிப்பீட்டுக் கட்டணம் மற்றும் இதர நிர்வாகச் செலவுகள் போக உங்கள் கைக்கு நிகரத் தொகையாக எவ்வளவு கிடைக்கும் என்பதை மேலாளரிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவசரம் கருதி விவரங்களைக் கேட்காமல் விட்டுவிடுவது, பின்னாளில் தேவையற்ற பண இழப்பிற்கு வழிவகுக்கும்...!!














Click it and Unblock the Notifications