பெங்களூரில் பாதி பேர் ஓட்டு போடல.. வாக்குப்பதிவு சதவீதத்தை பின்னுக்கு இழுத்த நகர்ப்புற வாக்காளர்கள்!
பெங்களூர்: கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் 69.23% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. குறிப்பாக, பெங்களூரின் 3 நகர்ப்புற லோக்சபா தொகுதிகளிலும் வாக்குப்பதிவு குறைவாக நடந்துள்ளது.
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 வெள்ளிக்கிழமையன்று நிறைவடைந்தது. இரண்டாம் கட்டத் தேர்தலில் 13 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் தலா 8, மத்திய பிரதேசத்தில் 7, அசாம், பீகாரில் தலா 5, வங்கம், சத்தீஸ்கரில் தலா 3, வங்கம் மற்றும் சத்தீஸ்கரில் தலா 3 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. 88 லோக்சபா தொகுதிகளில் மொத்தமாக 1,210 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், சராசரியாக 60 சதவீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. கடைசி நேர வாக்காளர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இது சற்று மாறக்கூடும். சிறு சிறு அசம்பாவிதங்களைத் தவிர, வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலின் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவில், மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்:
அசாம் - 70.68%
பீகார் - 54.91%
சத்தீஸ்கர் - 73.19%
ஜம்மு காஷ்மீர் - 71.63%
கர்நாடகா - 67.45%
கேரளா - 65.34%
மத்திய பிரதேசம் - 56.76%
மகாராஷ்டிரா - 54.34%
மணிப்பூர் - 77.18%
ராஜஸ்தான் - 63.93%
திரிபுரா - 78.63%
உத்தரப் பிரதேசம் - 54.83%
மேற்கு வங்காளம் - 71.84%.
கர்நாடகாவில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கர்நாடகாவில் 69.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பெங்களூரு சென்ட்ரல், பெங்களூர் வடக்கு மற்றும் பெங்களூர் தெற்கு ஆகிய மூன்று நகர்ப்புறத் தொகுதிகளில் குறைவாகவே வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் மொத்தமாக 68.96% வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த முறை முதற்கட்டமாக அங்கு 14 தொகுதிகளில் நடந்துள்ள தேர்தலில் அதைவிட சற்று அதிகமாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. அதிகபட்சமாக மாண்டியா தொகுதியில் 81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக பெங்களூர் மத்தி தொகுதியில் 52.81% வாக்குப்பதிவும் நடந்துள்ளது.
நேற்று தேர்தல் நடைபெற்ற கர்நாடக மாநிலத்தின் 14 தொகுதிகளில் 10 தொகுதிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு நடந்துள்ளது. பெங்களூரின் 4 லோக்சபா தொகுதிகளிலும் வாக்குப்பதிவு குறைவாக பதிவாகியுள்ளது. பெங்களுரின் நகர்ப்புற லோக்சபா தொகுதிகளில் மிகக் குறைவான அளவில் அதாவது 55%க்கும் குறைவான வாக்குப்பதிவு நடந்த நிலையில், பெங்களூர் ரூரல் தொகுதியில் 67% வாக்குப்பதிவு நடந்துள்ளது.
நகர்ப்புறத்தில் குறைவான வாக்காளர்களே தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி உள்ளனர். பெங்களூர் சென்ட்ரல் லோக்சபா தொகுதியில் தோராயமாக 52.81 சதவீதம், பெங்களூர் வடக்கு தொகுதியில் 54.42 சதவீதம், பெங்களூர் தெற்கில் 53.15 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
அதாவது, பெங்களூர் நகர்ப்புற பகுதிகளில் கிட்டத்தட்ட சரிபாதி வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. பெங்களூர், சென்னை உள்ளிட்ட நகர்ப்புற தொகுதிகளின் வாக்காளர்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாதது இந்த முறையும் தொடர்கிறது.












Click it and Unblock the Notifications