பெங்களூருவில் டிசம்பர் 31 மாலை 6 மணி முதல் 144 தடை.. கடும் கட்டுப்பாடு.. போலீஸ் கமிஷ்னர் அதிரடி
பெங்களூரு: பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷ்னர் கமல் பந்த் அறிவித்துள்ளார்.
கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டும். குறிப்பாக எம்.ஜி.ரோடு, பிரிக்கேட் ரோடு பகுதிகளில் விடிய, விடிய பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். இந்நிலையில குண்டுவெடிப்பு மற்றும் பாலியல் தொல்லை போன்ற சம்பவங்கள் காரணமாக எம்.ஜி.ரோடு, பிரிக்கேட் ரோடு, சர்ச் தெரு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட நள்ளிரவு 12 மணி முதல் 12.05 மணி வரை 5 நிமிடம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் உள்ளது. இதை தடுக்க கர்நாடகா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்து வருகிறது. அதன்படி, பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்று கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.
புத்தாண்டு கொண்டாட்டம் -பொதுவிடத்தில் குடித்துவிட்டு கும்மாளமிட்டால் நடவடிக்கை.. போலீஸ் எச்சரிக்கை.!
இந்நிலையில் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று இரவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பெங்களூருவில் டிசம்பர் 31ம் ததி மாலை 6 மணி முதல் மறுநாள்(புத்தாண்டு அன்று) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. எம்.ஜி.ரோடு, பிரிக்கேட் ரோடு, சர்ச் தெரு, கோரமங்களா, இந்திராநகரில் உள்ள பகுதிகள் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத மண்டலக்களாக்கப்படும். விடுதிகள், பார்கள், உணவகங்களில் முன்கூட்டியே முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.