‛தி கேரளா ஸ்டோரி’ படம் பற்றி பிரதமர் மோடி பேச்சு! கர்நாடகா பிரசாரத்தில் காங்கிரஸ் மீது கடும் சாடல்
பெங்களூர்: பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இன்று வெளியானது. இந்நிலையில் தான் ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் பற்றி கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பாக பேசினார். மேலும் அந்த படத்துக்கு தடை விதிக்க கோரும் காங்கிரஸ் கட்சியை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஹிந்தி திரைப்பட இயக்குனர் சுதிப்தோ சென் கதை எழுதி இயக்கி இருக்கும் திரைப்படம் ‛தி கேரளா ஸ்டோரி'. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது கேரளாவை சேர்ந்த ஏராளமான பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு தீவிரவாத செயலில் ஈடுபடுத்தப்படுவது போல் காட்சிகள் இருந்ததே இதற்கு காரணமாகும்.

அதாவது கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுவதோடு ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டு சதித்திட்டங்கள் தீட்டுவது போல் காட்சிகள் இருந்தன.
இதற்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியினரும், இஸ்லாமிய அமைப்புகளும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். குறிப்பாக இந்த திரைப்படத்தின் பின்னணியில் சங்பரிவார் அமைப்பு உள்ளதாக பினராயி விஜயன் குற்றம்சாட்டி இருந்தார். இந்த திரைப்படத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பிய நிலையில் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளர், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.
சில காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, 32 ஆயிரம் பெண்களுக்கு பதில் 3 பெண்கள் என்ற வகையில் படத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து எதிர்ப்பு உள்ளது. கேரளாவில் திரைப்படத்தை வெளியிட காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியான திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளதோடு, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார். கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பல்லாரியில் இன்று பிரதமர் மோடி பிரசாரம் செய்து பேசினார். அப்போது ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:
கேரளா என்பது கடின உழைப்பாளிகள் மற்றும் திறமையானவர்கள் கொண்ட மாநிலமாகும். இங்கு அறிவார்ந்த மக்கள் உள்ளனர். இத்தகைய அழகிய கேரளா மாநிலத்தில் தீவிரவாதம் எப்படி ஊடுருவுகிறது என்பதை காட்ட ‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் முயற்சிக்கிறது. ஆனால் இந்த திரைப்படத்துக்கு தடை செய்து தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. இதுபோன்ற விஷயங்களை தடை செய்யவும், நாட்டின் வளர்ச்சியை புறக்கணிக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு தெரியும்.

தீவிரவாதம் தற்போது புதிய வடிவத்தை கையில் எடுத்துள்ளது. ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர சமூகத்தை உள்ளிருந்து பிரித்தாள்வதற்கான வேலையை செய்கிறது. 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தீவிரவாதத்தின் புதிய முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது தீவிரவாத அமைப்புகள் முன்பு மண்டியிட்டு இருந்தது. இதனால் நீண்டகாலமாக வன்முறையால் பாதித்தோம். மேலும் தீவிரவாதத்தில் இருந்து இந்த நாட்டை காங்கிரஸ் ஒருபோதும் பாதுகாக்கவில்லை. இத்தகைய சூழலில் கர்நாடகத்தை காங்கிரஸால் பாதுகாக்க முடியுமா?'' என கேள்வி எழுப்பி சாடினார்.












Click it and Unblock the Notifications