2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. ராகுல் காந்தி தீக்சை பெற்ற கர்நாடக மடாதிபதி மீது போக்சோ வழக்கு!
பெங்களூர்: கர்நாடகத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 சிறுமிகள் வழங்கிய புகாரின் அடிப்படையில் கர்நாடகத்தை சேர்ந்த மடாதிபதி மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மடாதிபதியிடம் தான் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி லிங்கதீட்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் முருகா மடம் உள்ளது. லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த இந்த மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருக சரணாரு உள்ளார். இவர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.
இந்நிலையில் தான் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி இந்த மடத்துக்கு சென்று அவரிடம் லிங்க தீக்சை பெற்றார். இந்நிலையில் தான் தற்போது மடாதிதி சிவமூர்த்தி முருக சரணாரு மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
தாஜ்மஹாலை விட ராமர்பாலம் சிறந்தது! சர்ச்சையை கிளப்பிய கர்நாடக மடாதிபதி.. பரபர பேச்சு
பாலியல் தொல்லை புகார்
சித்ரதுர்காவில் விடுதியில் தங்கி 2 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவிகள் பெங்களூரில் சுற்றி திரிந்த நிலையில் ஒருவர் பிடித்து மைசூரில் உள் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைத்தார். இதையடுத்து தொண்டு நிறுவனத்தினர் சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். அதாவது மடத்தில் தொடர் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும் இதையடுத்து இருவரும் ஓடிவந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் நலக்குழுவிடம் புகார்
இதுதொடர்பாக தொண்டு நிறுவனம் சார்பில் மாணவிகள் குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் அளித்துள்ளது. குழந்தைகள் நலக்குழு மாணவிகளிடம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின்போது மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணாரு மீது பாலியல் தொல்லை புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் நலக்குழு போலீசாருக்கு பரிந்துரை செய்தது.
மடாதிபதி மீது வழக்கு
இதுதொடர்பாக மைசூர் நசர்பாத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணாரு மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் மடத்தின் நிர்வாகியாக உள்ள பசவராஜன் மற்றும் அவரது மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் நடந்த இடம் சித்ரதுர்கா என்பதால் மைசூர் நஜர்பாத் போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கு சித்ரதுர்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பழங்களில் மயக்கமருந்து
இதுபற்றி தொண்டு நிறுவனத்தின் ஆலோசகர் சரஸ்வதி கூறும்போது, ‛‛ சிறுமிகள் எங்களிடம் வந்தபோது பேசும் நிலையில் இல்லை. தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கினோர். அதன்பிறகு தான் பாலியல் தொல்லை குறித்து தெரிவித்தனர். பாலியல் துன்புறுத்தலுக்கு முன்பு சாக்லேட்டுகள் மற்றும் மயக்கமருந்து கலந்த பழங்களை வழங்கப்படதாக தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீசில் புகார் செய்தோம். தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்'' என்றார்.
மடத்தின் நிர்வாகம் மறுப்பு
இதற்கிடையே பாலியல் தொல்லை தொடர்பான விஷயத்தை மடத்தின் நிர்வாகம் முழுமையாக மறுத்துள்ளது. காழ்ப்புணர்ச்சி காரணமாக போலியான புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மடத்தின் நிர்வாகம் கூறியுள்ளது. மடத்தின் வழக்கறிஞர் விஸ்வநாதய்யா கூறுகையில், ‛‛இதற்கு பின்னணியில் மடங்களுக்கு எதிரான சக்திகள் உள்ளன. சிறுமிகளை மூளைச்சலவை செய்து வாக்குமூலம் கொடுக்க வைத்துள்ளனர். குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை'' என்றார். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.