தனியார் நிறுவன ஊழியர்கள் வாகனங்களை "BH சீரிசில்" பதிவு செய்யலாம்.. உத்தரவிட்ட கர்நாடக ஹைகோர்ட்
பெங்களூர்: தனியார் நிறுவன ஊழியர்களின் போக்குவரத்து வாகனங்கள் அல்லாத தனிநபர் பயன்பாட்டு வாகனங்களையும் BH- வரிசையில் பதிவு செய்யலாம் என்று கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாகனங்களுக்கான எண் பதிவில் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வரிசை எண்ணில் எண்கள் கொடுக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு தமிழ்நாடு என்றால் (TN ) என்ற வரிசையிலும் கர்நாடகா என்றால் KA என்ற வரிசையிலும் எண்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

மாநிலம் விட்டு மாநிலம் மாறும் போது
ஆனால், வாகன உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் மாறும் போது வாகனப் பதிவுகளில் சிக்கல்கள் எழுந்தன. இதற்கு மாற்றாக வாகன உரிமையாளர், மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் வாகனப் பதிவு செய்வதைத் தவிர்க்க, புதிய வாகனப் பதிவில் பிஎச் என தொடங்கும் மத்திய அரசு அறிமுகம் செய்தது. பொதுவாக ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு வாகனம் எடுத்துச் செல்லப்படும் வாகனங்களை மோட்டார் வாகன விதிகளின் படி ஒராண்டிற்குள் மறு பதிவு செய்ய வேண்டும்.

மோட்டார் வாகன வரி
இதன்படி, புதிய பிஎச் வாகன பதிவு வசதியை விருப்பத்தின் அடிப்படையில் பாதுகாப்பு பணியாளர்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் தனியார் துறை நிறுவன ஊழியர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. பாரத் வரிசை கொண்ட எண்களின் கீழ் வாகன பதிவுக்கு மோட்டார் வாகன வரி சற்று கூடுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தனியார் நிறுவன ஊழியர்களின் வாகனங்களுக்கு பாரத் வரிசை எண்களில் பதிவு செய்ய கர்நாடக அரசு மறுப்பதாக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

முரண்பாடாக இருப்பதாக
பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் நிறுவன ஊழியர் ஷாலினி என்பவர் உள்பட சிலர் இந்த மனுவை தாக்கல் செய்து இருந்தனர். தங்கள் மனுவில், மத்திய அரசு கொண்டு வந்த மோட்டார் வாகன திருத்த சட்டம் (20 வது திருத்தம்) த்திற்கு முரண்பாடாக கர்நாடக அரசின் மாநில போக்குவரத்து துறை சுற்றறிக்கை இருப்பதாகவும், தங்கள் வாகனங்களை பாரத் வரிசையின் கீழ் பதிவு செய்ய மறுத்தத்தற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

உயர்நீதிமன்றம் நிராகரிப்பு
இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று தகுதி வாய்ந்த தனியார் நிறுவன ஊழியர்களின் வாகனங்களையும் பாரத் வரிசை எண்களின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று கர்நடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கர்நாடக அரசு தனது வாதத்தில், தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதாலும் அடிக்கடி வேலையை மாற்றிக்கொள்வதாலும் அவர்களின் மாற்றத்தக்க பணியிடங்களை கண்டறிவது கடினமாக உள்ளது என்று கூறியது. மேலும், தனியார் நிறுவனங்களில் அடிக்கடி பணியிடங்களை மாற்றுவதால் அவர்களிடம் சாலை வரி உள்ளிட்டவைகள் வசூலிப்பதில் சிக்கல்கள் இருப்பதாகவும் கூறியது. ஆனால் கர்நாடக அரசின் வாதத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.












Click it and Unblock the Notifications